Last Updated : 15 Aug, 2018 07:52 AM

 

Published : 15 Aug 2018 07:52 AM
Last Updated : 15 Aug 2018 07:52 AM

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 6 பேர் மீதான கைது நடவடிக்கை ரத்து; தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு சிபிஐக்கு மாற்றம்: விசாரணையை 4 மாதத்தில் முடிக்கவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம் பவம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் உட்பட 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே 22-ல் நடைபெற்ற போராட்டத்தின்போது கலவரம் மூண்டது. அப்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு நியமித்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசனும் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வேண்டும், துப்பாக் கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும், காயமடைந்தவர் களுக்கும் இழப்பீட்டு தொகையை அதிகப்படுத்த வேண்டும், தலை மைச் செயலர், உள்துறை செயலர், ஆட்சியர், எஸ்பி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், சட்டவிரோத கைது நட வடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கை கள் தொடர்பாக 15 பொதுநல மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது அமர்வு ஏற்கெனவே விசாரித்தது.

அப்போது அரசு தரப்பில், "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 99 நாள் போராட்டம் அமைதியாக நடைபெற்றது. நூறாவது நாள் போராட்டத்தின்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதை மீறி போராட்டக்காரர்கள் கலவரம் செய்தனர். வேறுவழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய நிலைக்கு போலீஸார் தள்ளப்பட்ட னர். இந்த சம்பவத்தில் 72 போலீ ஸார் உட்பட 144 பேர் காயமடைந் தனர். 200 வாகனங்கள் சேதப்படுத் தப்பட்டன" என வாதிடப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான், ஷாஜிசெல்லன், இ.சுப்புமுத்துராம லிங்கம் ஏ.கண்ணன், பாஸ்கர் மதுரம், எஸ்.எம்.ஆனந்த முருகன், எழிலரசு உள்ளிட்டோர் வாதிட்டனர். இவர்கள் வாதிடும்போது, "துப்பாக் கிச்சூட்டின்போது போலீஸ் நிலை ஆணை பின்பற்றப்படவில்லை. திட்டமிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப் பட்டுள்ளது. 99 நாள் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் அடை யாளம் காணப்பட்டு கொல்லப்பட் டுள்ளனர். இதனால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்" என வாதிட்டனர்.

இந்த வழக்கில் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு:

சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். யாருடைய தவறாக இருந்தாலும் விசாரணை நியாய மாக நடைபெற வேண்டும். இங்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீ ஸார் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட் டுள்ளன. அவ்வாறு இருக்கும்போது இந்த வழக்கை மாநில போலீஸாரே விசாரிப்பது சரியாக இருக்காது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர் வில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது. துப்பாக்கிச்சூடு சம் பவம் குறித்து ஏன் சிபிஐ விசார ணைக்கு உத்தரவிடக் கூடாது என கேள்வி எழுப்பியது குறிப்பிடத் தக்கது.

மே 22-ல் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றி, சிப்காட் போலீஸார் பதிவு செய்த முதல் வழக்கின் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 161 (3)-ன் கீழ் வாக்குமூலமாக கருதி விசாரிக்க வேண்டும் என கடந்த 2-ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வரும் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசா ரணைக் குழுவை டெல்லி சிபிஐ இயக்குநர் நியமிக்க வேண்டும். துப் பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் மட்டும் இல்லாமல், முழு பின்னணி குறித்தும் சிபிஐ விரிவாக விசாரித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். விசா ரணையை சிபிஐ 4 மாதங்களில் முடிக்க வேண்டும்.

கூடுதல் இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் முடிக்கப்படுகின் றன. சிபிஐ விசாரணைக்கு பிறகு கூடு தல் இழப்பீடு கோரிக்கையை முன் வைக்க உரிமை வழங்கப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு தொடர்பான காவல்துறை நிலை ஆணை 703-ஐ போலீஸார் மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. போலீஸ் நிலை ஆணை 703-ஐ தற்காலத் துக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டியது அவசியம். இதற் காக டிஜிபி குழு ஒன்றை நியமிக்க வேண்டும். இக்குழு போலீஸார் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை 1990-ல் தெரிவித்துள்ள கருத்துகள் மற்றும் சர்வதேச தரத்துக்கு ஏற்ப போலீஸ் நிலை ஆணையை மாற்றியமைக்க வேண்டும்.

தொலைத்தொடர்பு வசதியை தற்காலிகமாக முடக்கி வைக்கும் விவகாரத்தில் தெளிவாக வரை யறை இல்லை. இதற்காக கருத்துரிமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ள கருத்துகளின் அடிப்படையில் புதிய விதிகளை வகுக்க உள்துறை செயலர் புதிய குழு அமைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மக்கள் அதி காரம் அமைப்பைச் சே்ர்ந்த நெல்லை கடையநல்லூர் கலில் ரகுமான் (47), அவரது மகன்கள் முகமது அனாஸ் (22), முகமது இர் ஷாத் (20), ஆலங்குளம் வேல்முரு கன், கோவில்பட்டி சரவணன், உசிலம்பட்டி கோட்டையன் ஆகி யோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் முகமது அனாஸ் கன்னியாகுமரியில் ஹோமியோபதி மருத்துவப் படிப்பும் அவரது சகோ தரர் முகமது இர்ஷாத் நெல்லை பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பும் பயில்கின்றனர்.

பின்னர், 6 பேரும் தேசிய பாது காப்பு சட்டத்தில் கைது செய்யப் பட்டனர். இதை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது அமர்வு, 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட உத்தரவை ரத்து செய்தது.

172 வழக்குகள் ஒன்றாக சேர்ப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிப்காட் போலீஸார் முதல் வழக்கு (குற்ற எண்: 191/2018) பதிவு செய்தனர். பின்னர் இதே சம்பவம் தொடர்பாக சிப்காட், தூத்துக்குடி வடக்கு, தெற்கு, மத்திய காவல் நிலையங்களில் 172 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டன.

இதை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, ஒரே சம்பவத்துக்கு அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்வதை ஏற்க முடியாது. எனவே துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான 172 வழக்குகளையும் ஒரே வழக்காக சேர்த்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்குதான் தற்போது சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x