Published : 13 Aug 2018 03:09 PM
Last Updated : 13 Aug 2018 03:09 PM

செல்போன் பறித்த இளைஞரைத் துரத்திப் பிடித்த பேராசிரியர்: ஒருவர் தப்பி ஓட்டம்

சென்னைக்கு அலுவல் ரீதியாக வந்த கோவையைச் சேர்ந்த வேளாண் துணை பேராசிரியர் தன் செல்போனைப் பறித்த இருவரில் ஒருவரைத் துரத்திப் பிடித்தார்.

கோவை, அனந்த நகரைச் சேர்ந்தவர் ராஜகோபால் (47). இவர் வேளாண்துறை துணைப் பேராசிரியராகப் பதவி வகிக்கிறார். அலுவல நிமித்தமாக சென்னை வந்த அவர் மேலதிகாரிகளைச் சந்தித்தார். பின்னர் இன்று காலை 10.30 மணி அளவில் அண்ணாநகரில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்குவதற்காக கோயம்பேடு வந்த அவர் ஆட்டோவில் ஏறி அண்ணாநகர் 3-வது பிரதான சாலையில் இறங்கி நடந்து சென்றார்.

அப்போது செல்போன் அழைப்பு வந்ததால் அவர் செல்போனை எடுத்துப் பேசியபடி நடந்து சென்றார். அப்போது அவருக்கு பின்புறத்திலிருந்து வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் அவரிடமிருந்து செல்போனைப் பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியர் அவர்களை விரட்டினார்.

அவரிடமிருந்து தப்பிக்க அவர்கள் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டினர். அப்போது பின்னால் அமர்ந்திருந்த இளைஞரை அவர் இழுத்துக் கீழே தள்ளினார். மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் தப்பி ஓடிவிட்டார்.

விரட்டிப் பிடிக்கும் முயற்சியில் ராஜகோபாலின் கன்னத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

பிடிபட்ட இளைஞர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரைப் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெயர் பாலாஜி (24) என்பதும், தெற்கு அகரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தப்பி ஓடிய பாலாஜியின் கூட்டாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x