Published : 06 Aug 2018 02:40 PM
Last Updated : 06 Aug 2018 02:40 PM

காவேரி மருத்துவமனைக்கு தயாளு அம்மாள் வருகை

திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு அவரது மனைவி தயாளு அம்மாள் அழைத்து வரப்பட்டார்.

திமுக தலைவர் கருணாநிதி குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கடந்த 27-ம் தேதி இரவு ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த சில மணி நேரத்தில் உடல் நலம் சீரானது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதியின் உடல்நலம் கடந்த 29 ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பாதிக்கப்பட்டது. இதையொட்டி வதந்திகளும் பரவியது. சென்னையில் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் அவர் உடல் நிலை சீரானது.

குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், ராகுல் காந்தி, தேவகவுடா, மத்திய அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர், நடிகர் ரஜினிகாந்த், பாரதிராஜா, சிவகுமார், பார்த்திபன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

இந்நிலையில் அவரது உடல்நிலை சீராகி சில நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று அறிக்கை வெளியானது. இந்நிலையில் இன்று காலையில் கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதியம் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் ஸ்டாலின், கனிமொழி, அழகிரி உட்பட அனைவரும் மருத்துவமனைக்கு திடீரென வந்தனர்.

மதியம் 2 மணிக்கு மேல் கருணாநிதி வழக்கமாகப் பயன்படுத்தும் கார் காவேரி மருத்துவமனைக்கு வந்தது. அதில் அவரது மனைவி தயாளு அம்மாள் கருணாநிதி பயன்படுத்தும் வீல் சேரில் அமரவைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x