Published : 06 Aug 2018 11:02 AM
Last Updated : 06 Aug 2018 11:02 AM
தமிழக மக்கள் கைத்தறி ரகங்களை வாங்கி அணிந்து, கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தேசிய கைத்தறி தினத்தை (ஆகஸ்ட் 6) முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “சுதேசி இயக்கத்தின் போர் வாளாகவும், கைத்தறி தொழிலின் முக்கியத்துவமும், அது சமூக பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றிவரும் பங்களிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், கைத்தறித் தொழிலை மேம்படுத்தி, கைத்தறி நெசவாளர்களின் பெருமையை உயர்த்திட வேண்டுமென்ற உயரிய நோக்கிலும் ஆகஸ்ட் திங்கள் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கைத்தறி தொழில், விவசாயத்திற்கு அடுத்தப்படியாக ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. தமிழ்நாட்டில் சுமார் 1.90 லட்சம் நெசவாளர் குடும்பங்கள் உள்ளதோடு, இத்தொழில் 3.19 லட்சம் நெசவாளர்கள் மற்றும் நெசவு சார்ந்த உப தொழில் புரிவோருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க கைத்தறித் தொழிலின் வளர்ச்சிக்காக தமிழக அரசு, 1.55 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 41 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் 4 இணை விலையில்லா சீருடை வழங்கும் திட்டம், அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 15 முதல் ஜனவரி 31 வரை கைத்தறித் துணி விற்பனைக்கு 30 விழுக்காடு தள்ளுபடி மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மேலும், தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் முதியோர் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கும் திட்டம், நெசவாளர்களுக்கு முதல்வரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் வழங்கும் திட்டம், கைத்தறி நெசவாளர்களுக்கு ஆயுள் காப்பீடு திட்டம், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ காப்பீடு திட்டம், நெசவாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம், மாநில அளவில் சிறந்த நெசவாளர் விருது வழங்கும் திட்டம், திறன்மிகு கைத்தறி நெசவாளர்களுக்கு பரிசுகள் வழங்கும் திட்டம், உற்பத்திப் பொருட்களில் புதுமை முயற்சிகளையும் பல்வகைப்படுத்துதலையும் ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி அளிக்க கைத்தறி உதவித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பிரிவு மக்களும், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் விற்பனை நிலையங்களிலும், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும், தூய சரிகை, தூய பட்டு மற்றும் பருத்தி கைத்தறி ரகங்களை வாங்கி அணிந்து, கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
கைத்தறி தொழில் மேன்மேலும் வளரவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை தரம் உயரவும், தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் மற்றும் இத்தொழில் சார்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் தேசிய கைத்தறி தின வாழ்த்துகள்” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT