Published : 06 Aug 2018 10:32 AM
Last Updated : 06 Aug 2018 10:32 AM

சென்னையில் செல்போனை பறித்த இளைஞர்கள்: போலீஸார் விரட்டிப் பிடித்தனர்

சென்ட்ரல் அருகே செல்போனை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய இரண்டு பேரை அவ்வழியே வந்த போலீஸார் விரட்டிப்பிடித்தனர். மேலும் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே தி.நகரைச் சேர்ந்த சரவணன் என்பவர் ரயிலை விட்டு இறங்கி பேருந்துக்காக வந்துள்ளார். அப்போது செல்போன் அழைப்பு வந்ததால் போன் பேசியபடியே நடந்து சென்றுள்ளார். அவர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், அவரிடமிருந்த செல்போனை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன், திருடன், திருடன் என்று கூச்சலிட்டுள்ளார். அப்போது அவ்வழியே வந்த பூக்கடை உதவி காவல் ஆய்வாளர் ரமேஷ், காவலர்கள் செந்தில்குமார், வடிவேல் ஆகியோர் அவர்களை விரட்டி சென்றனர். அவர்கள் மூவரும் போலீஸாருக்கு போக்கு காட்டியபடி தப்பிச்செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர்.

போலீஸார் வழிப்பறி நபர்களை துரத்துவதைப் பார்த்த பொதுமக்கள் அவர்களை மடக்கினர். இதனால் அவர்களால் தப்பிச்செல்ல முடியவில்லை. இந்த நேரத்தில் பின்னால் துரத்தி வந்த போலீஸார் பொதுமக்கள் உதவியுடன் இருவரை பிடித்தனர். உடன் வந்த அரவிந்த் என்பவர் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

பிடிபட்ட இருவரிடமும் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் புளியந்தோப்பைச் சேர்ந்த அபிமன்யு மற்றும் சந்தோஷ் என தெரியவந்தது. அவர்களிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட செல்போன்களை பறிமுதல் செய்து இருவரையும் பூக்கடை போலீஸார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய அரவிந்த்தை தேடி வருகின்றனர்.

பிடிபட்ட இருவர் மீதும் பூக்கடை, ஏழுகிணறு உள்ளிட்ட காவல் நிலையங்களில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x