Published : 02 Aug 2018 10:29 PM
Last Updated : 02 Aug 2018 10:29 PM
பிரியாணி கடையில் ஓசி பிரியாணி கேட்டு பாக்சிங் போட்டு ஊழியர்களை தாக்கி தலைமறைவாக இருக்கும் 11 பேரில் 6 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விருகம்பாக்கம் ஆர்.ஆர்.அன்பு பிரியாணி கடையில் கடந்த 27-ம் தேதி பிரியாணி கேட்டு தகராறில் ஈடுபட்ட திமுக தொண்டரணி நிர்வாகி யுவராஜ், திவாகர் உட்பட 11 பேர் கடை ஊழியர்களை கடுமையாக தாக்கினர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இந்திய அளவில் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டது.
இதையடுத்து யுவராஜ், திவாகர் இருவரையும் திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்தனர். இன்று மு.க.ஸ்டாலின் விருகம்பாக்கம் பிரியாணி கடைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். இதையடுத்து இந்த சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான ஓட்டல் ஊழியர்களான பிரகாஷ் மற்றும் கருணாநிதி ஆகியோரிடம் நலம் விசாரித்தார்.
ஏற்கனவே, காயமடைந்த பிரகாஷ்(32), மற்றும் கருணாநிதி(35) ஆகியோர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த அடிப்படையில், ஓட்டலில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் சாலிகிராமத்தை சேர்ந்த கார்த்திக்(22), மணிகண்டன்(23) கிஷோர் (எ) குட்டி கிஷோர்(19), ராம்ஷோர் (எ) பெரிய கிஷோர்(23), சுரேஷ், (எ) சிலுவை சுரேஷ்(19), சதிஷ்குமார் (எ) சதிஷ்(23), ஆகிய 6 பேரை இன்று கைது செய்தனர்.
விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட 6 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான யுவராஜ் மற்றும் திவாகர் ஆகிய 2 பேரை விருகம்பாக்கம் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT