Published : 01 Aug 2018 06:02 PM
Last Updated : 01 Aug 2018 06:02 PM

விருகம்பாக்கத்தில் பிரியாணி கடையில் புகுந்து பாக்ஸிங் பாணியில் குத்து: மேலாளரைத் தாக்கிய திமுக தொண்டரணி நிர்வாகிக்கு போலீஸ் வலை

 விருகம்பாக்கத்தில் பிரியாணி கடையை மூடச்சொல்லி தகராறு செய்து பாக்ஸிங் பாணியில் பிரியாணி கடை மேனேஜருக்கு குத்துவிட்ட திமுக தொண்டரணி நிர்வாகியை போலீஸார் தேடி வருகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் ஆர்.ஆர்.அன்பு பிரியாணி என்ற பெயரில் பிரியாணி கடை இயங்கி வருகிறது. இங்கு கடந்த ஞாயிற்றுகிழமை இரவு வியாபாரம் முடிந்த பின்னர் கடையை மூடிவிட்டு கேஷ் டேபிளில் மேனேஜர் பிரகாஷ் அமர்ந்து கணக்கு பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது 10 பேர் கொண்ட கும்பல் ஷட்டரைத் தூக்கிவிட்டு திடுதிடுமென உள்ளே நுழைந்தது. அவர்கள் அனைவரும் பிரியாணி கேட்டுள்ளனர். அனைத்தும் முடிந்து கடையை மூடிவிட்டோம் என்று மேனேஜர் பிரகாஷ் கூறியுள்ளார்.

அப்போது அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், 'நாங்கள் யார் தெரியுமா? எங்களுக்கே இல்லை என்கிறாயா? தலைவர் உடல்நிலை இப்படி இருக்கும்போது கடை திறக்கிறாயா?' என்று கேட்டுத் தாக்கத் தொடங்கியுள்ளனர். அதில் பிரதானமாக இருந்த நபர் பாக்ஸிங் ஸ்டைலில் சரமாரியாக மேனேஜரைத் தாக்கும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில் தாக்கும் நபர் விருகம்பாக்கம் திமுக தொண்டரணி நிர்வாகி யுவராஜ் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் ஹோட்டல் ஊழியர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மேனேஜர் பிரகாஷுக்கும், இன்னொரு ஊழியருக்கும் கடுமையான காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முகத்தில் இரண்டு இடத்தில் தையல் போடப்பட்டது.

மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து ஆர்.ஆர்.அன்பு பிரியாணி கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் 506 (2), 324, 147 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள திமுக தொண்டரணி நிர்வாகி யுவராஜ், திவாகரன் உள்ளிட்ட தாக்குதலில் ஈடுபட்ட 11 பேரைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x