Published : 24 Jul 2018 04:45 PM
Last Updated : 24 Jul 2018 04:45 PM

ஐந்தாவது நாளாக தொடரும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்; அத்தியாவசியப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு: மார்க்சிஸ்ட்

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசு சுமூகத் தீர்வு காண வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பாலகிருஷ்ணன் செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “பெட்ரோல் - டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் ஐந்தாவது நாளாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் தேங்கியுள்ளன. இதேபோல் பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வர வேண்டிய லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்டு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளன.

ஏற்கெனவே இரண்டு முறை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றுவதாக கூறியும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்காத காரணத்தினாலும், இனிமேல் இத்தொழிலே நடத்த முடியாது என்கிற சூழ்நிலைமையாலும் தான் தற்போது லாரி உரிமையாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஐந்து நாட்களாக நீடித்து வரும் இந்தப் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக லாரி உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, சுமூகத் தீர்வு காண வேண்டும்” என பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x