Published : 24 Jul 2018 02:26 PM
Last Updated : 24 Jul 2018 02:26 PM

திருப்பூர் பாப்பாள் விவகாரம்: 4 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது

திருப்பூர் பாப்பாள் விவகாரத்தில் 4 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் (42), திருப்பூர் மாவட்டம் ஒச்சாம்பாளையம் அரசுப் பள்ளியில் சமையலராகப் பணியாற்றிவந்தார். கடந்த 16-ம் தேதி தனது சொந்த ஊரான திருமலைக்கவுண்டன்பாளையம் உயர்நிலைப் பள்ளிக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், பாப்பாள் தங்கள் ஊரில் வேலை செய்யக் கூடாதெனச் சாதியைக் காரணம் காட்டி, உள்ளூரில் உள்ள ஆதிக்கச் சாதியினர் கடுமையாக எதிர்த்தனர். இதுகுறித்து பாப்பாள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டார். இதையடுத்து, பாப்பாளை வட்ட வளர்ச்சி அலுவலர் ஒச்சாபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள பள்ளிக்கே மீண்டும் அவரைப் பணியிட மாற்றம் செய்தார். இதற்கு எதிராகப் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தினர். போராட்டத்தின் விளைவாக, வட்ட வளர்ச்சி அலுவலர் செய்த பணியிட மாற்றம் ரத்து செய்யப்பட்டது.

திருமலைக்கவுண்டன்பாளையத்திலேயே பாப்பாள் பணியாற்றுவதற்கு சார் ஆட்சியர் ஸ்வரன்குமார் உத்தரவு பிறப்பித்தார்.

இதனிடையே, இச்சம்பவத்தில் தொடர்புடைய 12 பேர் மற்றும் அடையாளம் தெரியக்கூடிய வகையில் உள்ள 75 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், பாப்பாள் மீது சாதிய அடக்குமுறையை செய்ததாக, திருமலைக்கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த கந்தசாமி, மூர்த்தி, பழனிச்சாமி, மற்றொரு மூர்த்தி ஆகிய நான்கு பேரை சேவூர் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x