Published : 21 Jul 2018 06:45 PM
Last Updated : 21 Jul 2018 06:45 PM

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அகற்ற மாட்டோம்: இலங்கை அரசு அறிவிப்பு

இலங்கையில் உள்ள காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அகற்ற மாட்டோம் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையின் தென் மாகாணங்களின் தலைநகரான காலி அந்நாட்டின் பெரிய நகரங்களில் ஒன்று. மேலும் இலங்கையின் முக்கியமான துறைமுகமான காலித் துறைமுகமும் இங்கே அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் சர்வதேச கடற்பாதையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் காலி துறைமுகம் அமைந்துள்ளதால் ரோமானியர்கள், கிரேக்கர்கள், அரேபியர்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்களின் வணிகத்தளமாகவும் பயன்படுத்தப்பட்டது.

2200 ஆண்டுகளுக்கு முன்னர் தாலமி வரைந்த உலக வரைப்படத்தில் காலி நகரம் குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம் அந்த நகரத்தின் பழமையை அறிந்துகொள்ள முடியும். உலகப் புகழ்பெற்ற வரலாற்றுப் பயணியான இபுன் பதுதாவும் காலிக்கு வருகை தந்துள்ளார்.

காலி கோட்டையும், கிரிக்கெட் மைதானமும்

g2jpg50 

இலங்கையில் போர்ச்சுகீசியர்களின் ஆட்சிக் காலத்தில் காலியில் கி.பி.1620-ம் ஆண்டு கோட்டை ஒன்றைக் கட்ட ஆரம்பித்தார்கள். பின்னர் டச்சுக்காரர்களின் ஆட்சிக் காலத்தில் காலி கோட்டை 52 ஹெக்டேர் நிலப்பரப்பில் 14 கொத்தளங்கள், நூலகம், பள்ளி, தேவாலயம், மருத்துவமனை, காவலர் விடுதி, நீதிமன்றம், சிறைச்சாலை, கலங்கரை விளக்கம் ஆகிய கட்டமைப்புக்களுடன் விரிவுபடுத்தப்பட்டன. பின்னர் 1796-ம் ஆண்டு டச்சுக்காரர்களிடமிருந்து கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். 1876-ம் ஆண்டு காலி கோட்டை அருகே ஆங்கிலேயர்களால் விளையாட்டு மைதானமும் கட்டப்பட்டது.

தற்போதையை காலிக் கோட்டையின் தேவாலய வீதியில் தேவாலயம், நூலகம், வணிக நிலையங்கள், ராணி வீதியில் கடல்சார் தொல்பொருள் கூடம், நீதிமன்ற வளாகம், காவல்துறையினர் குடியிருப்பு, மூர் வீதியில் கைவினைப் பொருட்கள், ஆடைகள், மரச்சிற்பங்கள், ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள், விற்பனைக் கூடங்கள் உள்ளன. மேலும் காலி கோட்டையில் சிறந்த உணவகங்களும், தங்கும் விடுதிகளும் உண்டு. கோட்டை அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் 29.02.1984லிருந்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

1988-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு காலிக் கோட்டையை உலக மரபுரிமை அமைவிடமாக அறிவித்தது. காலிக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க காலி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்தி 1988-ம் ஆண்டிலிருந்து சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 2006-ம் ஆண்டு காலி கோட்டையில் கிரிக்கெட் போட்டிகளைப் பார்வையாளர்கள் பார்த்து ரசிப்பதற்கு பார்வையாளர் அரங்கமும் மற்றும் கட்டிடங்களும் புதிதாகக் கட்டப்பட்டன. புதிதாக காலி கோட்டையில் கட்டப்பட்ட பார்வையாளர்கள் அரங்கத்தையும், கட்டிடங்களையும் அகற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் காலி கோட்டையை மரபுரிமைப் பட்டியலில் இருந்து நீக்குவதாகவும் யுனெஸ்கோ நிறுவனம் 2007-ம் ஆண்டு முதல் இலங்கை அரசுக்கு அறிவித்து வந்தது.

கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை

g3jpg100 

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் அமைச்சர்கள் காலி கோட்டையைப் பாதுகாக்கும் வகையில் யுனெஸ்கோ அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து காலி கோட்டையைப் பாதுகாக்க கிரிக்கெட் மைதானத்தை அகற்றுவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது என இலங்கை ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன்கள் அர்ஜுன ரணதுங்க, மகால ஜயவர்தன ஆகியோர் இலங்கை கிரிக்கெட் அணியை உலகறியச் செய்த காலி கிரிக்கெட் மைதானத்தை அகற்றக்கூடாது என கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தில் கேட்கப்பட்டபோது அந்நாட்டு இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் சாகல ரத்னாயக்க கூறுகையில், ''காலி சர்வதேக கிரிக்கெட் மைதானத்தை அகற்ற வேண்டும் என்ற நோக்கம் அரசுக்கு கிடையாது. இந்த மைதானத்தில் தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகள் எப்போதும் போல நடைபெறும். 2006-ம் ஆண்டு ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் காலி கோட்டையில் கட்டப்பட்ட கிரிகெட் பார்வையாளர் அரங்கமும், கட்டிடங்கள் மட்டுமே அகற்றப்படும்'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x