Last Updated : 20 Jul, 2018 02:16 PM

 

Published : 20 Jul 2018 02:16 PM
Last Updated : 20 Jul 2018 02:16 PM

தஞ்சாவூர் அருகே மது போதையில் மனைவி, மகன்களை கொலை செய்த கணவன்: முன்னாள் எம்எல்ஏக்களின் மகனுக்கு போலீஸார் வலைவீச்சு

தஞ்சாவூர் அருகே மது போதையில் மனைவியையும், இரு மகன்களையும் மண்வெட்டிக் கம்பால் அடித்துக் கொலை செய்த கணவனை போலீஸார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் போலீஸ் சரகம் அன்னப்பேட்டை மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (47). இவரது தந்தை செல்லப்பா, தாய் யசோதா இருவரும் திமுக ஆட்சிக்காலத்தில் வலங்கைமான் தொகுதியில் எம்எல்ஏக்களாக பதவி வகித்தவர்கள். ஜெயக்குமாரின் சித்தி இளமதி சுப்பிரமணியன் அதிமுக ஆட்சிக்காலத்தில் அதே தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர்.

ஜெயக்குமாருக்கு திருமணமாகி அனிதா (40) என்ற மனைவியும், தினேஷ் (9), தரனேஷ் (7) ஆகிய இரு மகன்களும் இருந்தனர். இதில் அனிதா தஞ்சாவூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் தினேஷும், தரனேஷும் நான்காம் வகுப்பும், இரண்டாம் வகுப்பும் படித்து வந்தனர்.

ஜெயக்குமார் விவசாயம் பார்த்து வந்தார். அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு ஜெயக்குமார் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரத்தில் அருகில் கிடந்த மண்வெட்டிக் கம்பை எடுத்து அனிதாவைத் தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். அப்போது மகன்கள் இருவரும் தாயை அடிப்பதைத் தடுத்தனர். இதில் ஜெயக்குமார் இரு மகன்களையும் மண்வெட்டிக் கம்பால் தாக்கியதால் மண்டை உடைந்தது.

உடனடியாக அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சத்தம் கேட்டு வந்து உயிருக்குப் போராடியவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மகன்கள் இருவரும் இறந்தனர். வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனளிக்காமல் அனிதா இறந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து பாபநாசம் டிஎஸ்பி செல்வராஜ், மெலட்டூர் போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான ஜெயக்குமாரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x