Last Updated : 17 Jul, 2018 10:03 AM

 

Published : 17 Jul 2018 10:03 AM
Last Updated : 17 Jul 2018 10:03 AM

சென்னை அயனாவரம்  அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு; முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேர் கைது

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு செய்த முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அயனாவரத்தில் பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஒருவர் அண்ணாசாலை ரிச்சி தெருவில் எலெக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார்.

இவரது மகள் அயனாவரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார் (12 வயது). இவருக்கு 2 காதுகளும் கேட்பதில் குறைபாடு உள்ளது. இந்நிலையில், அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவரை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு   பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் மன ரீதியிலும் பாதிப்படைந்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அவரிடம் பெற்றோர் தனியாக அமர்ந்து பேச்சுக் கொடுத்துள்ளனர். அப்போது அவர், சிலர் தன்னிடம் பாலியல் ரீதியிலான தொந்தரவில் ஈடுபட்டதாக பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் தெரிவித்தனர்.

அதன்படி பெண் ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் ரகசிய விசாரணையில் இறங்கினர். இதில், மாணவி வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்து வந்த காவலாளி, லிப்ட் ஆபரேட்டர், பிளம்பர் என அடுத்தடுத்து 18 பேர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அத்து மீறலில் ஈடுபட்டதாக அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டர்களான 4 பேர்,  காவலாளிகளான 5 பேர், பிளம்பராக உள்ள 4 பேர் உட்பட மொத்தம் 18 பேரை பிடித்து போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இவர்களில் 6 பேர் முதியவர்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை மிரட்டல்

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது,  "மாணவியின் தந்தை அதிகாலை பணிக்குச் சென்றால் மீண்டும் இரவில்தான் வீடு திரும்புவார். தாயாரும் வீட்டிலேயே இருந்துள்ளார். எனவே, மாணவி அடுக்குமாடியில் உள்ள லிப்ட் வழியாக தினமும் தனியாக இறங்கி கீழே வந்து பின்னர், வாகனம் மூலம் பள்ளிக்குச் சென்றுள்ளார். லிப்ட்டில் மாணவி வரும்போது லிப்ட் ஆபரேட்டர் ஒருவர் முதல் முதலில் மாணவியிடம் பாலியல் ரீதியான சீண்டலில்   ஈடுபட்டுள்ளார். இதை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என கத்தி முனையில் மிரட்டியுள்ளார்.

பின்னர், அவர் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்து வரும் மற்றவர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் இதே பாணியில் கடந்த 7 மாதமாக பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளனர் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்" என்றனர்.

குழந்தைகளுக்கு விழிப்புணர்வு

குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள் பாலியல் சீண்டல்களுக்கு சில நேரங்களில் ஆளாகின்றனர். எனவே, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உடலின் அந்தரங்க உறுப்புகள் பற்றியும், அதை பிறர் தொடும் போது என்ன செய்ய வேண்டும், உதவிக்கு யாரை அழைக்கலாம் என சொல்லிக் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவழிக்க வேண்டும், மனம் விட்டு பேச வேண்டும்.

அவர்கள் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய உடன் இன்று என்ன நடந்தது என பொறுமையாக கேட்க வேண்டும். ஏதாவது பாலியல் சீண்டல்கள் இருந்தால் தயங்காமல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம். அல்லது அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் தெரிவிக்கலாம். ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் சிறைக்குச் செல்ல வழிவகை செய்து தரப்படும் என காவல் கூடுதல் ஆணையர் எம்.சி.சாரங்கன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x