Published : 17 Jul 2018 09:42 AM
Last Updated : 17 Jul 2018 09:42 AM

கும்பகோணத்தில் 94 குழந்தைகள் பலியான பள்ளி தீ விபத்தின் 14-ம் ஆண்டு நினைவு நாள்; பெற்றோர், உறவினர் கண்ணீர் அஞ்சலி

கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியான 14-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில், குழந்தைகளை இழந்த பெற்றோர், பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் நிகழ்ந்த 14-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, குழந்தைகளை இழந்த பெற்றோர் நேற்று காலை அவரவர் வீட்டில் குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து, அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்களை வைத்துப் படையலிட்டனர்.

பின்னர் தீ விபத்து நிகழ்ந்த கிருஷ்ணா பள்ளி முன் பெற்றோர்கள் கூடினர். அங்கு வைக்கப்பட்டிருந்த 94 குழந்தைகளின் உருவப் படங்கள் அடங்கிய பதாகைக்கு மாலை அணிவித்தும் மலர்வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். அப்போது, குழந்தைகளின் படங்களைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பலர், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

நினைவிடத்தில் அஞ்சலி

பின்னர், ஸ்ரீகிருஷ்ணா பள்ளியிலிருந்து பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மவுன ஊர்வலமாகப் புறப்பட்டு பாலக்கரையில் உள்ள, தீ விபத்தில் பலியான பள்ளிக் குழந்தைகளின் நினை வாக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்துக்குச் சென்றனர். அங்குள்ள நினைவுத் தூணுக்கு மலர்வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், நேற்று மாலை ஸ்ரீகிருஷ்ணா பள்ளியிலிருந்து பெற்றோர், உறவினர் மற்றும் பொதுமக்கள் கைகளில் அகல் விளக்குகளை ஏந்தியபடி ஊர்வலமாக மகாமகக் குளத்துக்குச் சென்றனர். அங்கு, தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக, மகாமகக் குளக்கரையில் மோட்ச தீபம் ஏற்றினர். கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 14-ம் ஆண்டு நினைவு தினமான நேற்று ஸ்ரீகிருஷ்ணா பள்ளியின் முன்பு வைக்கப்பட்டிருந்த பதாகைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் பெற்றோர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x