Published : 10 Jul 2018 08:46 PM
Last Updated : 10 Jul 2018 08:46 PM

சென்னை-மதுரை-மும்பை இடையேயான ஏர் இந்தியா விமான சேவை மீண்டும் தொடங்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை-மதுரை-மும்பை இடையேயான ஏர் இந்தியா விமான சேவை 20 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கும் என மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த 42 ஆண்டுகளாக ஏர் இந்தியா விமானம் AI-671/672 சென்னை வழியாக மதுரையில் இருந்து மும்பைக்கு செல்லும் விமான சேவை நடந்து வருகிறது. 80 சதவிகித விமான பயணிகள் பயணிக்கும் இந்த விமான சேவை, வரும் 12 ஜூலை 2018 முதல் எந்த காரணமும் அறிவிக்கப்படாமல் நிறுத்தம் செய்யப்பட உள்ள விவரம் எனது கவனத்திற்கு வந்தது.

மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் விமான சேவை நடைபெற்று வருவதையும், ரூ.1,500 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் மதுரையில் அமைக்க இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை ராமேஸ்வர சுற்றுலா தலங்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, அதன் இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா, ஏர் இந்தியா தலைவர் மற்றும் இயக்குனர் பிரதீப் சிங் கரோலா ஆகியோருக்கு நான் தனித்தனியாக கடிதம் எழுதி ஏர் இந்தியா விமானம் AI-671/672 சென்னை வழியாக மதுரையில் இருந்து மும்பைக்கு செல்லும் விமான சேவையை நிறுத்தப்படாமல் தொடர வலியுறுத்தினேன்.

அதன் தொடர்ச்சியாக எனது தனிச் செயலாளரிடம் நேரடியாகச் சென்று விமானத்துறை அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிய அறிவுறுத்தினேன். தற்போது அதன் அடிப்படையில் விமானப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், ஹஜ் புனித பயணம் நடைபெற்று வருவதால் இந்த சென்னை வழியாக மதுரையில் இருந்து மும்பைக்கு செல்லும் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

நான் வலியுறுத்தியதின் பேரில் 20 நாட்களுக்குள் பின் மீண்டும் ஏர் இந்தியா விமானம் AI-671/672 சென்னை வழியாக மதுரையில் இருந்து மும்பைக்கு செல்லும் விமான சேவை இயக்கப்படும் என்பதையும், விரைவில் மும்பையில் இருந்து மதுரைக்கு நேரடி ஏர் இந்தியா விமான சேவை தொடங்குவது குறித்து பரிசீலிப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர்.

இதனால் விமானம் மூலம் சுற்றுலா, வியாபார வர்த்தகம், மருத்துவ சிகிச்சைக்காக பயணிப்போரின் பயணம் எந்த தடையுமின்றி 20 நாட்களுக்கு பிறகு பயணிக்க முடியும். அதே போல பரிசீலனையில் உள்ள மும்பையில் இருந்து மதுரைக்கு நேரடி ஏர் இந்தியா விமான சேவையும் விரைவில் தொடங்கும்'' என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x