Published : 10 Jul 2018 03:40 PM
Last Updated : 10 Jul 2018 03:40 PM
ராக்கெட் ராஜா மீதான குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை ஆனைகுடியைச் சேர்ந்தவர் ஜெ.ராஜா என்ற ராக்கெட் ராஜா. இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கூறியுள்ளதாவது:
''சென்னை தேனாம்பேட்டை போலீஸார் என்னை கடந்த மே 9-ம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். நான் கைது செய்யப்பட்ட தகவலை போலீஸார் எனது நெருங்கிய உறவினர்களிடம் தெரிவிக்கவில்லை. பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். இந்நிலையில் என்னை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாநகர் காவல் ஆணையர் ஜூன் 9-ம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் நான் கைது செய்யப்பட்டேன்.
என்னை குண்டர் தடுப்புக் காவலில் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. குண்டர் தடுப்புக் காவலில் சிறையில் அடைப்பதற்கு உதாரணம் காட்டியுள்ள அடிப்படை வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஜாமீனில் வெளியே வந்திருப்பதால், அந்த வழக்கில் நானும் ஜாமீனில் வெளிவர வாய்ப்புள்ளதாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அந்த வழக்கில் ஜாமீன் கேட்டு நான் தாக்கல் செய்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. மனு நிலுவையில் உள்ள போது அந்த வழக்கில் எனக்கு ஜாமீன் கிடைக்கும் என மாநகர் காவல் ஆணையர் முடிவுக்கு வந்தது சட்டப்படி தவறு. கவனம் செலுத்தாமல் என்னை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்டு பல நாட்கள் கழித்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தாமதத்துக்கான காரணம் உத்தரவில் விளக்கப்படவில்லை. எனவே என்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நெல்லை மாநகர் காவல் ஆணையர் 9.6.2018-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து என்னை விடுதலை செய்ய வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது அமர்வு விசாரித்து, ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாநகர் காவல் ஆணையர் ஜூன் 9-ம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT