Published : 10 Jul 2018 01:57 PM
Last Updated : 10 Jul 2018 01:57 PM

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க உத்தரவு; மீண்டும் கலந்தாய்வு நடத்த வேண்டும்: அன்புமணி

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை செயல்படுத்தி, அதனடிப்படையில் மீண்டும் கலந்தாய்வு நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்ணாக 196 மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் கருணை மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டு புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில், தமிழில் வழங்கப்பட்ட வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருந்ததால், தமிழில் அத்தேர்வை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் ஒரு வினாவுக்கு 4 வினாக்கள் வீதம் மொத்தம் 196 கருணை மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது. தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்குத் தவறான வினாக்களை எழுப்பியதால் இழைக்கப்பட்ட அநீதிக்கு இதுதான் சரியான பரிகாரம் ஆகும்.

மதுரை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடாது. இத்தீர்ப்பின் பயனாக அனைத்திந்திய அளவில் தரவரிசையில் மாற்றம் ஏற்படக்கூடும் என்பதால் நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க வேண்டும். தமிழகத்தில் கலந்தாய்வு முடிவடைந்து விட்ட நிலையில், இப்போது நடைபெற்று வரும் நிலையில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க வேண்டும்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உரிய கருணை மதிப்பெண்களை வழங்கி, அதனடிப்படையில் புதிய தரவரிசைப் பட்டியலை தயாரித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட வேண்டும். அதனடிப்படையில் தமிழகத்தில் மீண்டும் கலந்தாய்வு நடத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மதுரை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு என்பது தமிழில் தவறான வினாக்கள் எழுப்பப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான பரிகாரம் மட்டுமே. அனைத்து மாணவர்களுக்கும் முழுமையான சமூக நீதியை உறுதி செய்ய வேண்டுமானால் நீட் தேர்வை அடியோடு ரத்து செய்வது தான் தீர்வு என்பதால், அதை நோக்கிய முன்னெடுப்புகளை தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்” என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x