Published : 10 Jul 2018 08:48 AM
Last Updated : 10 Jul 2018 08:48 AM

8 வழிச் சாலைக்கான அளவீட்டுப் பணி இன்று தொடங்குகிறது: 42 கிராமங்களிலும் தலா ஒரு போலீஸார் நிறுத்தம்

சென்னை - சேலம் 8 வழிச் சாலைக்கான அளவீட்டுப் பணி இன்று தொடங்குகிறது. இதனையொட்டி நிலம் கையகப்படுத்தப்பட உள்ள 42 கிராமங்களிலும் தலா ஒரு போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை - சேலம் 8 வழிச் சாலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, உத்திரமேரூர் வட்டங்கள் வழியாகச் செல்கிறது. ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 10 கிராமங்களிலும், செங்கல்பட்டு வட்டத்தில் 5 கிராமங்களிலும், உத்திரமேரூர் வட்டத்தில் 27 கிராமங்களிலும் என மொத்தம் 42 கிராமங்களில் இருந்து 59.1 கி.மீ. தூரத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

ஏற்கெனவே சில இடங்களில் பாதையை குறிக்கும் வகையில் 110 மீட்டர் அகலத்துக்கு அளந்து கல்போடப்பட்டுள்ளது. சாலைக்காக நிலங்களைக் கையகப்படுத்த விவசாய நிலங்களிலும், பொதுமக்களுக்குச் சொந்தமாக உள்ள பட்டா இடங்களிலும் அளவீட்டு பணிகள் இன்று தொடங்குகின்றன. ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் துண்டல் கழனி என்ற பகுதியில் முதல் அளவீட்டுப் பணி நடைபெற உள்ளது.

இதனையொட்டி 42 கிராமங்களிலும் தலா ஒரு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பிரச்சினைக்குரியவர்களின் விவரங்களையும் திரட்டி வருகின்றனர். மேலும் வெளியூர் நபர்கள் அங்கு வந்து விவசாயிகளிடம் போராட்டத்தை தூண்டுகிறார்களா என்றும் கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையே நில அளவையின்போது பிரச்சினை ஏற்பட்டால் அதனைச் சமாளிப்பது குறித்து காவல்துறை உயர் அலுவலர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி திடீர் ஆலோசனை நடத்தினார்.

வீடிழப்போருக்கு பசுமை வீடு

இந்தச் சாலையினால் சுமார் 80 பேர் வீடுகளை இழக்கின்றனர். இவர்களுக்குப் பட்டா வழங்கி பசுமை வீடுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விவசாயக் கிணறுகளுக்கான பாதிப்பு குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

உத்திரமேரூர் வட்டத்தில் உள்ள 27 கிராமங்களில் பெரும்பாலானோர் விவசாயத்தையே நம்பி உள்ளனர்.

அப்பகுதியில் நிலங்களை எடுக்கும்போது அதிக பிரச்சினை ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

எத்தகைய எதிர்ப்பு இருந்தாலும் சாலை வருவது உறுதி. அதனால் இழப்பீட்டை பெற்றுக் கொள்ளுங்கள். பிரச்சினை செய்தால் இழப்பீடு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதுடன், தேவையற்ற வழக்குகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று மறைமுக மிரட்டல்கள் போலீஸார் மூலம் விவசாயிகளுக்கு விடுக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x