Published : 10 Jul 2018 08:42 AM
Last Updated : 10 Jul 2018 08:42 AM
சர்கார் படத்துக்கான விளம்பரத்தில் நடிகர் விஜய் புகை பிடிப்பது போல காட்சி வெளியாகியுள்ளதால், அதற்காக நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், சன் பிக்சர்ஸ் படநிறுவனம் தலா ரூ. 10 கோடி வீதம் ரூ. 30 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டுமென தொடரப்பட்டுள்ள வழக்கில் மத்திய, மாநில அரசுகள் 2 வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த எஸ்.சிரில் அலெக்ஸாண்டர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு புகையிலைப் பொருட்களுக்கு எதிரான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். இந்தியாவில் பல்லாயிரக்கணக்கானோர் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். இதனால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் இறக்கின்றனர். சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விளம்பரப்படுத்த மத்திய அரசு கடந்த 2011-ம் ஆண்டு தடை விதித்துள்ளது.
ரூ.10 கோடி வீதம்
நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் விளம்பரத்தில் அவர் புகைப்பிடிப்பது போன்ற காட்சி வெளியாகியுள்ளது. இது சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விளம்பரம் தடை, ஒழுங்குமுறை சட்டத்துக்கு எதிரானது. மேலும், தமிழ்நாடு விளம்பரப் பொருள் கட்டாய தணிக்கை சட்டம் 1987-ன் கீழ் இதற்கு தணிக்கைச் சான்று பெறவில்லை.
புற்றுநோயாளிகளின் நலனுக்காக பொது நிதியை உருவாக்கி நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், சன் பிக்சர்ஸ் படத்தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து தலா ரூ.10 கோடி வீதம் ரூ. 30 கோடியை இழப்பீடாக வசூலித்து அதை ராயப்பேட்டையில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனை நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.
அதேபோல புகையிலைப் பொருட்களை விளம்பரம் செய்வதற்கான தடைச்சட்டத்தையும் தீவிரமாக அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரப்பட்டு இருந்தது.
இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள், நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் படத்தயாரிப்பு நிறுவனம் ஆகியோர் 2 வாரத்துக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தர விட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT