Published : 10 Jul 2018 08:41 AM
Last Updated : 10 Jul 2018 08:41 AM

கொலை, கொள்ளையை முற்றிலும் தடுக்க முடியாது; குற்றங்களை குறைக்க அரசு நடவடிக்கை- சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி உறுதி

கொலை, கொள்ளை நடப்பதை முற்றிலும் தடுப்பது இயலாத காரியம். ஆனால், அவற்றை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பொது, சட்டப்பேரவை உள்ளிட்ட மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசும்போது, ‘‘தமிழகத்தில் பல்வேறு குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. செயின் பறிப்பு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. மேலும், உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை, பணிப் பாதுகாப்பு இல்லை, வெளியிலும் உரிய மரியாதை இல்லை என்பதால் காவலர்கள் மன அழுத்தத்துடன் உள்ளனர். அவர்கள் விரக்தியடைந்து, கடந்த 7 ஆண்டுகளில் 300 பேர் தற்கொலை செய்துள்ளனர். உயர் அதிகாரிகள் வீட்டில் காவலர்கள் ஆடர்லிகளாக பணியாற்றுகின்றனர். அதிகாரிகளின் ஷூக்களுக்கு பாலிஷ் போடுவது, காய்கறி வாங்கித் தருவது போன்ற பணிகளை செய்கின்றனர். இதனால் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர்’’ என்றார்.

இதற்கு பதிலளித்து முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது:

கொலை, கொள்ளை குற்றங்கள் அதிமுக ஆட்சியில் மட்டும் நடக்கவில்லை. திமுக ஆட்சியிலும் நடந்துள்ளது. கடந்த ஆண்டில் ஆதாயக் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் குறைவாகவே பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் கொலை, கொள்ளை போன்ற குற்றங்களை தடுக்க முடியாது. உலக நாடுகளிலேயே இந்த குற்றங்களை நிறுத்த முடியவில்லை. ஆனால், குற்றங்களை குறைக்க முடியும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால், குற்றவாளிகளை எளிதில் கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர். செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை பொறுத்தவரை, திமுக ஆட்சியில் 14,707 வழக்கு கள் பதிவாகின. கடந்த 7 ஆண்டுகளில் 18,678 வழக்குகள் பதிவாகியுள்ளன. திமுக ஆட்சியில் ஆண்டுக்கு 2,941 ஆக பதிவாகிய இந்த வழக்குகள், அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு 2,660 ஆக பதிவாகியுள்ளன.

காவல் துறை அதிகாரிகள் வீட்டில் காவலர்கள் ஆடர்லிகளாக பணியாற்றும் முறை மாற்றப்பட்டு, அவர்களுக்காக பணியாற்ற இருப்பிட உதவியாளர்கள் என 86 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் ஆட்சியிலும் இதேபோன்ற நிலை இருந்தது. மேலும், காவலர்கள் குடும்ப பிரச்சினை காரணமாகவும் தற்கொலை செய்துள்ளனர். மன அழுத்தத்தை குறைப்பதற்காக காவலர்களுக்கு தற்போது யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் குடும்பத்தினருக்கும் கவுன்சலிங் வழங்கப்படுகிறது.

இவ்வாறு சட்டப்பேரவையில் முதல்வர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x