Published : 10 Jul 2018 08:39 AM
Last Updated : 10 Jul 2018 08:39 AM
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட 4 பூங்காக்களின் நீர் தேவையை சமாளிக்க ரூ.1 கோடியே 16 லட்சம் செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வாங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 525 பொது பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் நீர் தேவையை சமாளிப்பது மாநகராட்சி நிர்வாகத்துக்கு பெரும் சவாலாக உள்ளது. செலவும் அதிகமாகிறது. பல இடங்களில் நிலத்தடி நீர் கிடைக்காததால், லாரிகள் மூலமாக தண்ணீரை விநியோகிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், அந்தந்த பகுதியில் சென்னை குடிநீர் வாரியத்தின் கழிவுநீர் குழாய்களில் இருந்து கழிவுநீரை எடுத்து, அதைச் சுத்திகரிப்பதால் கிடைக்கும் நீரைக் கொண்டு பூங்காக்களைப் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தியாக ராய நகரில் உள்ள பூங்காக்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தண்டையார்பேட்டை மற்றும் ராயபுரம் மண்டலங்களுக்கு உட்பட்ட 4 பூங்காக்களிலும் ரூ.1 கோடியே 16 லட்சம் செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை நிறுவ மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “இந்த இயந்திரங்கள் மூலம் கிடைக்கும் நீரைக் கொண்டு பூங்காக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். இதனால் வறட்சி காலங்களில் நீர் கிடைக்காத சூழல் ஏற்படாது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT