Published : 10 Jul 2018 07:49 AM
Last Updated : 10 Jul 2018 07:49 AM

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக உயர்வு

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பரிசல் இயக்கவும், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நேற்று விநாடிக்கு 5,000 கனஅடி என்ற அளவில் நீர்வரத்து இருந்தது. ஏற்கெனவே கடந்த மாதத்தில் கர்நாடகா மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பின. இதையடுத்து, கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளில் உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது மீண்டும் கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. கடந்த 7-ம் தேதி பகலில் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்டது. 8-ம் தேதி இந்த அளவு மேலும் அதிகரிக்கப்பட்டு விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று பகலில் ஒகேனக்கல்லை அடைந்தது. முதலில் விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடி என்ற நிலைக்கு உயர்ந்த நீர்வரத்து, பின்னர் மாலையில் விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி என்ற அளவை தொட்டது.

நீர்வரத்து உயர்வு காரணமாக பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதனால், நேற்று பகல் முதல் சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் செல்லவும், ஆறு மற்றும் அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

மேட்டூர் அணை

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 3,165 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை 1,533 கனஅடியானது. நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 63.68 அடியாக இருந்தது. நேற்று காலை நீர்மட்டம் 63.72 அடியாக உயர்ந்தது. அனையின் மொத்த நீர் இருப்பு 27.53 டிஎம்சியாக உள்ளது.

அணையில் இருந்து குடிநீருக்காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x