Last Updated : 09 Jul, 2018 03:56 PM

 

Published : 09 Jul 2018 03:56 PM
Last Updated : 09 Jul 2018 03:56 PM

தூத்துக்குடி திருமண்டல பேராயர், பொருளாளர் ஆகியோரின் சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி திருமண்டல பேராயர் தேவசகாயம், பொருளாளர் மோகன் அருமைநாயகம் ஆகியோருக்கு தனி நீதிபதி விதித்த இருவாரம் சிறைத் தண்டனை உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஸ்டான்லி வேதமாணிக்கம் உள்ளிட்ட நான்கு பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தொடர்ந்திருந்தனர். அதில், “தூத்துக்குடி நாசரேத், சிஎஸ்ஐ திருமண்டல பேராயராக தேவசகாயம் உள்ளார். திருமண்டலப் பொருளாளராக மோகன் அருமைநாயகம் உள்ளார். 2012 ஆம் ஆண்டு தூத்துக்குடி திருமண்டல சபைக்குழு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் தங்களுக்கு ஓட்டுரிமை மறுக்கப்படுகிறது. எங்களுக்கு ஓட்டு அளிக்க அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்தும் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாமல் தங்களுக்கு மீண்டும் ஓட்டுரிமை மறுக்கப்படுகிறது என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. பின்பு சபைகுழு தேர்தல் நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்திருந்தது. இடைக்காலத் தடை உத்தரவை மதிக்காமல் தேர்தல் நடத்தியது தொடர்பாக மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது தூத்துக்குடி திருமண்டலப் பேராயர் தேவசகாயம் மற்றும் பொருளாளர் மோகன் அருமைநாயகம் நீதிமன்ற உத்தரவை அவமதித்துள்ளனர் என்பது தெளிவாகிறது. இதனால் தூத்துக்குடி திருமண்டலப் பேராயர் தேவசகாயம் மற்றும் பொருளாளர் மோகன் அருமைநாயகம் இருவருக்கும் தலா இரண்டு வாரம் சிறைத் தண்டனை விதித்தனர். மேலும் இருவருக்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அபராகத் தொகையை இரண்டு வாரத்தில் தலைமை நீதிபதி நிவாரணத் தொகையில் செலுத்த உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் தனிநீதிபதி உத்தரவுக்கு எதிராக அவசர மனுவாக மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (திங்கள்கிழமை) நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது தூத்துக்குடி திருமண்டலப் பேராயர் தேவசகாயம், பொருளாளர் மோகன் அருமைநாயகம் ஆகியோருக்கு தனி நீதிபதி விதித்த இருவாரம் சிறை தண்டனை உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x