Published : 09 Jul 2018 12:08 PM
Last Updated : 09 Jul 2018 12:08 PM

ரூ.150 கோடி மதிப்பீட்டில் நொய்யல் ஆற்றை சீரமைக்கும் திட்டம்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

ரூ.150 கோடி மதிப்பீட்டில் நொய்யல் ஆறு மாசடையாமல் இருப்பதற்கான பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று அவர் பேரவை விதி எண்.110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், ''கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் சின்னாறு மற்றும் காஞ்சி மாநதி இணைந்து நொய்யல் ஆறாக உருப்பெற்று, மேற்கு கிழக்காக, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களின் வழியாக சென்று, கரூர் மாவட்டத்தின் நொய்யல் என்ற கிராமத்தின் அருகில் காவிரியில் கலக்கின்றது.

திருப்பூர் மாநகராட்சி மற்றும் அருகாமையில் உள்ள பகுதிகளை நொய்யல் ஆறு கடக்கும் போது, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் மாசடைவதைத் தவிர்க்கும் பொருட்டு, ஒரு திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள் நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் தடுப்புச் சுவர் அமைத்து, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரினை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல தடுப்புச் சுவரின் வெளிப்புறத்தில் கழிவுநீர் வடிகால் அமைத்தல், தேவையான இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், நடைபாதை அமைத்தல், கரையோரப் பூங்கா மற்றும் அலங்கார விளக்குகள் அமைத்தல், அணைக்கட்டு பகுதியினை மேம்படுத்துதல் மற்றும் நதியினை தூர்வாரி சுத்தப்படுத்துதல் ஆகிய பணிகள் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, வரும் காலத்தில் நொய்யல் ஆறு மாசடையாமல் இருப்பதற்கான பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும்'' என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x