Published : 09 Jul 2018 08:13 AM
Last Updated : 09 Jul 2018 08:13 AM

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் 4 பேர் கைது: படகுடன் சிறைபிடித்தது இலங்கை கடற்படை

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவரது படகில் என்.செல்வம்(46), எஸ்.தினேஷ்(22), ஜி.முத்திருளாண்டி(42), என்.கோவிந்தராஜ்(38) ஆகிய 4 பேர் மண்டபத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடையே நேற்று முன்தினம் நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி படகை சிறைபிடித்தனர்.

படகில் இருந்த 4 பேரையும் கைது செய்து, விசாரணைக்காக காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். இவர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். இவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட வலைகளையும் பறிமுதல் செய்தனர்.

மீன்பிடி தடைக் காலம் முடிந்து முதன் முறையாக கடந்த 5-ம் தேதி கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேசுவரத்தைச் சேர்ந்த 2 படகுகள், 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அதன் பின்னர் தற்போது ஒரு படகு, 4 மீனவர்கள் என மொத்தம் 3 படகுகள் மற்றும் 16 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளுக்கு புதிய சட்டத்தின் கீழ் தண்டனை, அபராதம் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போதுதான் எந்த சட்டம் என்பது தெரியவரும் என மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x