Published : 09 Jul 2018 08:01 AM
Last Updated : 09 Jul 2018 08:01 AM

உச்ச நீதிமன்ற கெடு நாளை முடிகிறது; பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா இன்று தாக்கல்?

உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு நாளை (ஜூலை 10) முடிவடைவதால் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பான மசோதா, சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் அரசு துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிக்கும் வகையில் கடந்த 2013-ம் ஆண்டு லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட்டது. அந்த சட்டம் 2014 ஜனவரி 16 முதல் அமலுக்கு வந்தது. நாட்டிலேயே முதன்முதலாக மகாராஷ்டிரா மாநிலத்தில் லோக் ஆயுக்தா ஏற்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பிஹார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் என அடுத்தடுத்து ஒவ்வொரு மாநிலங்களாக லோக் ஆயுக்தா அமைப்பை அமைத்தன.

தற்போது ஆந்திரா, கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட 17 மாநிலங்களில் லோக் ஆயுக்தா இயங்கி வருகிறது. ஆனால் தமிழகம், தெலங்கானா, மேற்கு வங்கம், ஒடிஷா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் இன்னும் லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்றவில்லை. இந்நிலையில், லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜூலை 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

தற்போது தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்துவருகிறது. அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஜெயக்குமார், நடப்பு கூட்டத் தொடரிலேயே லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று தெரிவித்திருந்தார். பேரவை கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) முடிவடைகிறது. தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு நாளை (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது.

எனவே, நடப்பு கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று லோக் ஆயுக்தா சட்டம் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டு உடனடியாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே திமுக, காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளின் முழு ஆதரவோடு இந்த மசோதா நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டால், ஊழல், முறைகேடு தொடர்பாக முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் மீது யார் வேண்டுமானாலும் ஆதாரங்களுடன் புகார் செய்யலாம். அந்த புகாரின் மீது, விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறு நடவடிக்கைக்கு உள்ளானோரின் பதவியை பறிக்கவும் லோக் ஆயுக்தா சட்டத்தில் வழிவகை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கட்டாய ஓய்வு அளித்தல், சம்பளத்தை நிறுத்தி வைத்தல். பணிநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் லோக் ஆயுக்தா சட்டத்தின் மூலம் மேற்கொள்ள முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x