Published : 09 Jul 2018 08:00 AM
Last Updated : 09 Jul 2018 08:00 AM
தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலையாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூலை 9-ம் தேதியுடன் நிறைவடைகிறது. கடந்த 22 நாட்களில் பயனுள்ள வகையில் ஏதேனும் விவாதம் நடந்ததா என்று சிந்தித்துப் பார்த்தால் பெரும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஒரு காலத்தில் பயனுள்ள, பரபரப்பான ஆக்கப்பூர்வ விவாதங்கள் நடக்கும் மன்றமாக திகழ்ந்த சட்டப்பேரவை, இப்போது கூடிக் கலையும் மன்றமாக மாறியிருப்பது கவலை அளிக்கிறது. பேரவைக் கூட்டத் தொடர் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதைப் பார்த்தால், பேரவை உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்கள் வெட்கப்படும் அளவில்தான் உள்ளது.
பேரவை நிகழ்ச்சிகள் அனைத்தும் இப்போதும் ஒளிப்பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், ஆளுங்கட்சிக்கு சாதகமான பகுதிகள் மட்டுமே ஊடகங்களுக்கு அனுப்பி ஒளிபரப்பச் செய்யப்படுகின்றன. இதனால், ஆளுங்கட்சியினரின் தவறுகள் வெளியில் வராமல் மறைக்கப்படுகின்றன. அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கப்பட்டபோது, அதன்வழியாக சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், 7 ஆண்டுகள் ஆன பிறகும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
நாட்டில் பல மாநிலங்களில் அவை நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்படுகின்றன. சில மாநிலங்களில் ஊடகங்களே ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும்தான் சட்டப்பேரவை ஜனநாயகம் குரல்வளை நெறிக்கப்பட்டு உயிருக்கு போராடுகிறது. சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்படும்போது உறுப்பினர்களின் செயல்பாடுகளை மக்கள் அறிந்துகொள்ள முடியும் என்பது ஒருபுறமிருக்க, உறுப்பினர்களும் மிகவும் பொறுப்புடன் செயல்படுவர்.
எனவே, அடுத்த கூட்டத்தொடரில் இருந்தாவது சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை மக்கள் பார்த்து அறிவதற்கு வசதியாக நேரலை செய்ய பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT