Last Updated : 06 Jul, 2018 04:53 PM

 

Published : 06 Jul 2018 04:53 PM
Last Updated : 06 Jul 2018 04:53 PM

நீட் குளறுபடியால் பால் பாக்கெட், பேப்பர் போட்டு படிக்கும் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு பாழாக்கப்படுகிறது: உயர் நீதிமன்றம் வேதனை

பால் பாக்கெட், பேப்பர் போடுதல் ஆகிய வேலைகளில் ஈடுபட்டு பள்ளிக்கு சென்று படிக்கும் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு பாழாக்கப்படுவதாக உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு, தவறான மொழி பெயர்ப்புக்காக கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.கே,ரங்கராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவில், “நாடு முழுவதும் மே 6-ல் நடைபெற்ற நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் இருந்து 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் அளிக்கப்பட்டு, அதில் சரியான பதிலை தேர்வு செய்ய வேண்டும்.

இந்த நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கபட்டிருந்தது. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் கேள்விகள் தவறான மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதனால் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு 49 வினாக்களுக்கும் தலா 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண் வழங்கவும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது சிபிஎஸ்இ பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஎஸ்இ சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில், “நாடு முழுவதும் தேசிய தமிழ் வினாத்தாளில் தவறு இருப்பதாக மனுதாரர் கூறுவது சரியல்ல. தேர்வு நடத்துவது, தேர்வு முடிவெடுப்பது மட்டுமே சிபிஎஸ்இ வேலை. வினாத்தாள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யும் போது தமிழ் வார்த்தைகள் சரியானதா என்பதை சிபிஎஸ்இயால் உறுதி செய்ய முடியாது.

தமிழில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடத்தை கற்பிற்கும் அனுபவமிக்க ஆசிரியர்களை வைத்தே ஆங்கில வினாத்தாள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்வதற்கு இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. பிராந்திய மொழியில் உள்ள அகராதியை அடிப்படையாக வைத்தே மொழி பெயர்ப்பு பணிகளை ஆசிரியர்கள் மேற்கொண்டனர்” எனக் கூறப்பட்டிருந்தது.

பின்னர், மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் வாதிடுகையில், “நீட் தமிழ் வினாத்தாளில், பாசுமதி அரிசி புதிய ரகம் என்பதற்கு ‘புதிய நகம்’, வெளவ்வால் என்பது ‘வெளனவால்’ என்றும், இடை நிலையை ‘கடை நிலை’என்றும், ரத்த நாளம் என்பது ‘த்தன்கள்’ என்றும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தமிழக மாணவர்களால் சரியாக பதிலளிக்க முடியவில்லை. இதற்காக கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்” என்றார்.

சிபிஎஸ்இ வழக்கறிஞர் வாதிடுகையில், “மொழிமாற்றம் சரியாகவே நடைபெற்றுள்ளது. எழுத்துப்பிழை இருந்தது. மனுதாரர் தவறு என்று சொல்லும் கேள்விகளுக்கான பதிலை சரியாக புரிந்து பதிலளித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களும் உள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் யாரும் நீதிமன்றம் வரவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கு மனுதாரருக்கு உரிமையில்லை” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், “தமிழக மாணவர்கள் பால் பாக்கெட், பேப்பர் போட்டு படிக்கின்றனர். இதுபோன்ற தவறு காரணமாக அவர்களின் மருத்துவ கனவு பாழாகிறது. வருங்கால சமுதாயத்தை நல்ல முறையில் கொண்டுச்செல்வது நமது கடமை.

பீகார் மாநிலத்தில் தேர்வு எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக மனுதாரர் வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு சிபிஎஸ்இ என்ன பதில் சொல்லப்போகிறது.

தமிழில் மொழி பெயர்ப்பில் அதிக பிழைகள் உள்ளன. இந்த வினாத்தாள் எப்படி ஏற்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு தாக்கல் செய்த மறுநாள் தேர்வு முடிவு வெளியிட்டது ஏன்? இது தவறான முன்னுதாரனமாகும். நீட் தேர்வில் சிபிஎஸ்இ யாருடைய கருத்தையும் கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறது” என அதிருப்தியை வெளிப்படுத்தினர். பின்னர், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x