Published : 06 Jul 2018 11:14 AM
Last Updated : 06 Jul 2018 11:14 AM

மகளிர் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாறும் தமிழகம்: ராமதாஸ் புகார்

மகளிர் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறிக் கொண்டிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அதற்கு காரணமானவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த புள்ளிவிவரங்களைப் பார்க்கும் போது பெண்களும், குழந்தைகளும் வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறிக்கொண்டிருப்பதை உணர முடிகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த ஆட்சியாளர்கள் தவறியது கண்டிக்கத்தக்கது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆணையிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள பொதுநல வழக்கில், தமிழக அரசின் தலைமைச் செயலரும், காவல்துறை தலைமை இயக்குனரும் தாக்கல் செய்துள்ள புள்ளி விவரங்களில் தான் மகளிரும், குழந்தைகளும் தமிழகத்தில் எந்த அளவுக்கு ஆபத்தான சூழலில் உள்ளனர் என்பது குறித்த புள்ளி விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக இருப்பது ஒருபுறமிருக்க, இத்தகைய குற்றங்களைச் செய்தவர்களில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தண்டனை பெறாமல் தப்பி விடுகின்றனர் என்பது தான் அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.

2016 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக நடந்ததாக பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை 11,625 ஆகும். இவற்றில் தண்டிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 257 மட்டும் தான். இது மொத்த வழக்குகளில் எண்ணிக்கையில் வெறும் 2% மட்டும் தான். அதேநேரத்தில் 1,244 வழக்குகளில் குற்றம் செய்தவர்கள் நேரடியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

1961 பேர் வேறு காரணங்களால் தண்டிக்கப்படாமல் விடப்பட்டிருக்கின்றனர். அதாவது விசாரணை முடிந்த வழக்குகளில் விடுவிக்கப்பட்டவர்களின் அளவு, தண்டிக்கப்பட்டவர்களின் அளவை விட 12 மடங்குக்கும் அதிகமாகும். 2017 ஆம் ஆண்டில் பதிவான 10,677 வழக்குகளில் 121 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் 1,834 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் வரை மகளிருக்கு எதிராக நடைபெற்ற 3,624 குற்றங்களில் 23 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். 191 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மகளிருக்கு எதிராக குற்றங்களை செய்தவர்களுக்கு தண்டிக்க அரசு தவறி விட்டது என்பதையே இவை உணர்த்துகின்றன.

அதுமட்டுமின்றி, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் நடந்த மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இவை தவிர, 4,604 வழக்குகளில் இறுதி விசாரணை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட போதிலும், அவற்றில் உள்ள குறைகள் காரணமாக நீதிமன்றங்களால் இதுவரை அவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இவற்றை விட கொடுமையான விஷயம் 1,002 வழக்குகளில் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும், 2,184 வழக்குகளில் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் புலன் விசாரணை முடியவில்லை என்பது தான்.

மகளிருக்கு எதிரான குற்றங்களைச் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டால் தான், அத்தகையக் குற்றங்கள் குறையும். ஆனால், மகளிருக்கு எதிரான குற்றங்களைச் செய்தவர்களை தண்டிக்காததன் மூலம், அத்தகைய குற்றங்களை ஆட்சியாளர்கள் ஊக்குவிக்கின்றனர்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் குற்றங்களின் விகிதம் குறைவாக உள்ளது. குற்றவழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் விகிதம் அதிகரித்துள்ளது என்று பெருமிதம் தெரிவித்திருந்தார்.

ஆனால், அவரது கூற்று தவறானது என்பதை அவரது அரசு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புள்ளி விவரங்களே நிரூபித்திருக்கின்றன. இத்தகைய இழிநிலைக்கு தமிழகத்தை தள்ளியவர்கள் வெட்கப்பட வேண்டும். மகளிருக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மகளிருக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீதிமன்றங்களில் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தி வழக்கு விசாரணையை வேகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; தேவைப்பட்டால் கூடுதல் மகளிர் நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து காவல் உட்கோட்டங்களிலும் மகளிர் காவல்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், அவை மகளிருக்கு எதிரான அனைத்துக் குற்றங்களையும் விசாரிப்பதில்லை.

இந்த நிலையை மாற்றி, மகளிர் காவல் நிலையங்களை வலுப்படுத்துதல், கூடுதல் அதிகாரங்களை வழங்குதல், அதிக எண்ணிக்கையில் புதிய காவல் நிலையங்களைத் திறத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், தமிழக காவல்துறையில் மகளிர் பாதுகாப்புக்கென தனிப்பிரிவை மகளிர் கூடுதல் டிஜிபி தலைமையில் தொடங்க வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x