Published : 06 Jul 2018 08:17 AM
Last Updated : 06 Jul 2018 08:17 AM

தூத்துக்குடியில் கலவரத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஜாமீன்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரத்தை தூண்டியது தொடர்பான 9 வழக்குகளில் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் வாஞ்சிநாதனை தூத்துக்குடி போலீஸார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்குகளில் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் வாஞ்சிநாதன் மனு தாக்கல் செய்தார். அதில், “தூத்துக்குடியில் மே 22-ல் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற ஊர்வலத்தில் நான் பங்கேற்றேன். கலவரத்தின்போது போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால் கலவரத்தை தூண்டியதாக என்னை போலீஸார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்துக்கு மூளையாக செயல்பட்டதாக சிப்காட் போலீஸார் என் மீது 9 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரித்தார். அப்போது, “வாஞ்சிநாதனுக்கு 9 வழக்குகளில் ஜாமீன் வழங்கப்படுகிறது. வாஞ்சிநாதன் மதுரையில் தங்கியிருக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் பங்கேற்கக் கூடாது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாகப் பேசவும், கருத்து தெரிவிக்கவும் கூடாது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்குகளில் போலீஸார் சம்மன் அனுப்பினால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்” என நிபந்தனைகள் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x