Published : 06 Jul 2018 08:15 AM
Last Updated : 06 Jul 2018 08:15 AM
பெண் பத்திரிகையாளரை முகநூலில் அவதூறாக விமர்சித்து கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் ஜூலை 20-ம் தேதி ஆஜராக வேண்டும். அப்போது விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், நீதிமன்ற நடவடிக்கைக்கு கட்டுப்படுவதாகவும் அவர் உத்தரவாதம் (பாண்ட்) அளிக்க வேண்டும் என மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.
முன்னாள் எம்எல்ஏவும், பாஜக பிரமுகருமான நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில், ஆளுநர் கன்னத்தில் தட்டிய பெண் பத்திரிகையாளரை அவதூறாக விமர்சித்து கருத்து பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் வழக்கறிஞர் ராஜேந்திரன் மூலம் நடிகர் எஸ்.வி.சேகர் மீது 7 பிரிவுகளின் கடந்த ஏப். 23-ம் தேதி வழக்கு தொடர்ந்தார்.
கடந்த மே 21-ம் தேதி நடந்த இவ்வழக்கு விசாரணையின்போது, எஸ்.வி.சேகர் ஜூலை 5-ம் தேதி ஆஜராக மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். இவ்வழக்கில் எஸ்.வி.சேகரின் வழக்கறிஞர் செந்தில்குமார் நேற்று ஆஜராகி எஸ்.வி.சேகருக்கு காய்ச்சல் என்பதால் ஆஜராக முடியவில்லை என தெரிவித்தார்.
இதையடுத்து, “ஜூலை 20-ம் தேதி எஸ்.வி.சேகர் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும். அப்போது நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு கட்டுப்படுவதாக உத்தரவாதம் எழுதி தர வேண்டும்” என மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT