Published : 06 Jul 2018 07:59 AM
Last Updated : 06 Jul 2018 07:59 AM
சட்டப்பேரவையின் மதிப்பீட்டுக் குழு, பொது கணக்குக் குழு, பொது நிறுவனங்கள் குழு உள்ளிட்ட குழுக்களின் புதிய தலைவர்கள், உறுப்பினர்கள் நேற்று தேர்வு செய்யப்பட்டனர்.
சட்டப்பேரவையில் மதிப்பீட்டுக் குழு, பொது கணக்குக் குழு, உரிமைக் குழு, அலுவல் ஆய்வுக் குழு, சட்ட விதிகள் ஆய்வுக் குழு, உறுதிமொழிக் குழு, அவைக் குழு, விதிகள் குழு, மனுக்கள் குழு, நூலகக் குழு ஆகிய குழுக்கள் உள்ளன. இக்குழுக்களில் மதிப்பீட்டுக் குழு, பொது கணக்குக் குழு, பொது நிறுவனங்கள் குழுக்களுக்கு தலா 16 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பேரவைச் செயலர் சீனிவாசனால் பெறப்பட்டன.
இந்நிலையில், ஒவ்வொரு குழுவுக்கும் தலா 16 உறுப்பினர்கள் மட்டுமே வேட்பு மனுக்களை அளித்திருந்ததால், அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இது தொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் பி.தனபால் நேற்று வெளியிட்டார்.
இதன்படி, மதிப்பீட்டுக் குழுவின் தலைவராக அதிமுக எம்எல்ஏ தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், பொது கணக்குக் குழு தலைவராக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், பொது நிறுவனங்கள் குழு தலைவராக அதிமுக எம்எல்ஏ செம்மலை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவை உரிமைக் குழுவின் தலைவராக பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், சட்டவிதிகள் ஆய்வுக் குழுவுக்கு அதிமுக எம்எல்ஏ சு.ரவி, உறுதிமொழிக் குழுவுக்கு அதிமுகவின் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் நியமிக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.
மேலும், அவைக் குழுவுக்கு அதிமுகவின் கே.எஸ்.தென்னரசு, விதிகள் குழுவுக்கு பேரவைத் தலைவர் பி.தனபால், மனுக்கள் குழுவுக்கு அதிமுக கொறடா எஸ். ராஜேந்திரன், நூலகக் குழுவுக்கு அருண்குமார், ஏடுகள் குழுவுக்கு தி.நகர் எம்எல்ஏ சத்யாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரவை முன் வைக்கப்படும் ஏடுகள் குழுவில் ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி. தினகரன் இடம் பெற்றுள்ளார். மேலும், பேரவை அலுவல் ஆய்வுக் குழுவில் ஏற்கெனவே உள்ள உறுப்பினர்கள் அப்படியே நீடிப்பார்கள் என்றும் தனபால் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT