Published : 30 Jun 2018 04:53 PM
Last Updated : 30 Jun 2018 04:53 PM
ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட சத்யஸ்ரீ ஷர்மிளா இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நயினார் கோயில் பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர் சத்யஸ்ரீ ஷர்மிளா (35). இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினை பரமக்குடியில் பூர்த்தி செய்தார். பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்த சத்யஸ்ரீ ஷர்மிளா, தான் ஒரு திருநங்கை என்பதை உணர்ந்த தருணத்தில் குடும்பத்தினருடன் இருந்து பிரிந்து செங்கல்பட்டு அருகே உள்ள நடராஜபுரத்தில் திருநங்கை ஷர்மிளா என்பவரின் ஆதரவுடன் வசிக்கத் துவங்கினார்.
தொடர்ந்து 2007-ல் சேலம் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பினை முடித்திருந்த சத்யஸ்ரீ ஷர்மிளா 11 ஆண்டுகள் கழிந்து சனிக்கிழமை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்.
வழக்குரைஞராகப் பதிவு செய்துள்ள திருநங்கையான சத்யஸ்ரீ ஷர்மிளா நமது செய்தியாளரிடம் கூறியதாவது,
“நான் வழக்குரைஞராக வேண்டும் என்பது தான் எனது நீண்டநாள் கனவு . இன்று இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக நான் பதிவு செய்துள்ளதில் மகிழ்ச்சி அடைகின்றேன். நான் நீதிபதியாக வேண்டும் என மூத்த நீதிபதிகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
2007-லேயே வழக்கறிஞராகும் தகுதி பெற்றிருந்தாலும் சமுதாயத்தில் திருநங்கைகளுக்கு உரிய ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என காத்திருந்தேன். இன்று அனைத்து துறைகளிலும் திருநங்கைகள் முன்னேறும் காலமாக உள்ளது.
நான் வழக்குரைஞராகுவதற்கு எனது திருநங்கை அம்மா ஷர்மிளா, எனது சகோதரிகள் தேவி, சுதா, ஜெயா மற்றும் திருநங்கை நலனில் அக்கறை உள்ள பல அமைப்புகள் எனக்கு உதவியுள்ளனர். எனது வழக்குரைஞர் பணியின் மூலம் திருநங்கை சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT