Published : 30 Jun 2018 01:49 PM
Last Updated : 30 Jun 2018 01:49 PM
ஈரோடு மாவட்டத்தில் விநோதப் புகார் அளித்த மனைவியினால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். 11 ஆண்டுகளுக்கு முன்பாக காணாமல் போன கணவர் குறித்து இப்போது புகார் அளித்த மனைவி, தனக்கு வெளி உலகம் தெரியாது என்று போலீஸிடம் கூறியுள்ளார்.
54 வயதான ஆறுமுகம் செம்மாம்பாளையத்தைச் சேர்ந்தவர், இவர் கூலித்தொழிலாளி. மனைவி பெயர் செல்வி, இவருக்கு வயது 51.
11 ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிளில் சென்றவர் மாயம்:
2007-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆறுமுகமும், செல்வியும் சைக்கிளில் அங்குள்ள கோயிலுக்குச் சென்றுள்ளனர். அதன் பிறகு மனைவையை வீட்டுக்கு அனுப்பி விட்டு தன் அம்மா வீட்டுக்கு போய்விட்டு வருவதாகச் சென்றார் ஆறுமுகம்.
சைக்கிளில் போனவர் போனவர்தான், இன்றுவரை வீடு திரும்பவில்லை. அவருக்கு என்ன ஆனது என்று புரியாத புதிராக உள்ளது. கணவரைத் தனக்கு தெரிந்த வழிகளில் தேடிய மனைவி செல்வி நாளடைவில் கணவரை மறந்தே போனார்.
இப்போது திடீரென கணவர் நினைவு வர ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அங்கு சென்று என் கணவரைக் காணவில்லை, கண்டுபிடித்துக் கொடுங்கள் என்றார் செல்வி, போலீசாரும் சரி புகார் எழுதிக் கொடு என்றனர்.
புகார் எழுதிக் கொடுத்தார் செல்வி, படித்துப் பார்த்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர், ‘என்னது 11 வருஷம் முன்னாடி காணாமப் போனாரா? இத்தனை வருஷாம் என்ன செய்துக்கிட்டிருந்தீங்க?’ என்று கேட்டனர்.
அதற்கு மனைவி செல்வி, எனக்கு வெளி உலகம் தெரியாதுங்க, யாரிடமும் அதிகம் பேச மாட்டேன். போன கணவர் திரும்புவார் என்று இத்தனை வருஷம் காத்திருந்தேன். அவர் வரவில்லை, அப்போதுதான் போலீசில் புகார் கொடு என்று சிலர் கூறினர், அதனால்தான் இப்போது புகார் கொடுக்கிறேன் என்றார் செல்வி.
போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT