Published : 30 Jun 2018 07:51 AM
Last Updated : 30 Jun 2018 07:51 AM

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 20 ஆயிரம் போலீஸார் ரத்த தானம்: சென்னையில் நடந்த முகாமை முதல்வர் தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 20 ஆயிரம் போலீஸார் ரத்த தானம் செய்தனர். சென்னையில் நடந்த முகாமை முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் ஆண்டுக்கு 8 லட்சம் யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. இதில் சுமார் 4 லட்சம் யூனிட் ரத்தம் 89 அரசு ரத்த வங்கிகளிலும் 4 லட்சம் யூனிட் ரத்தம் தனியார் ரத்த வங்கிகளிலும் சேகரிக்கப்படுகிறது.

கல்லூரி மாணவர்கள், இளைஞர் கள் பலர் தொடர்ந்து ரத்த தானம் செய்கின்றனர். மே மாதம் கல்லூரி விடுமுறை என்பதால் கொடையாளிகள் ரத்தம் கொடுப்பது குறைகிறது. இதனால் தட்டுப்பாடு ஏற்படும் சூழலும் உருவாகிறது. இதை தவிர்க்க, தமிழகம் முழுவதும் காவல் துறையினருக்கான ரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸார் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்தனர்.

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 89 இடங்களில் முகாம் நடத்தப்பட்டது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடந்த ரத்த தான முகாமை முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில், ரத்த தானம் செய்தவர்களுக்கு தமிழக அரசு சார் பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ரத்த தானம் செய்த போலீஸாருக்கு 2 நாள் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 20 ஆயிரம் போலீஸார் ரத்த தானம் செய்தனர். இதன்மூலம் 20 ஆயிரம் யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.

செய்தியாளர்களிடம் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியபோது, ‘‘காவல் துறையினர் ரத்த தானம் செய்வது மற்ற துறைகளுக்கு ஒரு முன் உதாரணம். போலீஸார் வழங்கும் ரத்தம் ஒரு சொட்டு கூட வீணாகாது. ரத்தத்தை பாதுகாப்பாக சேகரித்து வைக்க போது மான சேமிப்பு நிலையம் உள்ளது’’ என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x