Published : 29 Jun 2018 09:42 AM
Last Updated : 29 Jun 2018 09:42 AM

காவல்துறையை விமர்சித்து பேசிய வழக்கில் மாணவி வளர்மதிக்கு 15 நாள் காவல்

சேலம் வீராணம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி வளர்மதி (24). இவர் சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், சென்னை வடபழனியில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், காவல்துறையை விமர்சனம் செய்தும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது.

வழக்குப் பதிவு

இதுகுறித்து வடபழனி போலீஸார், வளர்மதி மீது வன்முறையை தூண்டியது உட்பட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் வளர்மதி அண்மையில் சேலம் - சென்னை பசுமை வழி சாலைத் திட்டத்தை எதிர்த்து சேலம் ஆச்சாங்குட்டப்பட்டியில் அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சேலம் போலீஸார் வளர்மதியை கைது செய்திருந்தனர்.

சேலம் பெண்கள் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வளர்மதியிடம், வடபழனி வழக்கில் கைது செய்யப்பட்டதற்கான ஆவணங்களை கடந்த 26-ம் தேதி வடபழனி போலீஸார் வழங்கினர். இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக வளர்மதி சேலத்தில் இருந்து சென்னைக்கு நேற்று காலை அழைத்து வரப்பட்டார்.

பின்னர் அவர் சைதாப்பேட்டை 17வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதித்துறை நடுவர் அங்காள ஈஸ்வரி, அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

இதையடுத்து வளர்மதி சென்னையிலிருந்து மீண்டும் சேலத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x