Published : 29 Jun 2018 08:10 AM
Last Updated : 29 Jun 2018 08:10 AM

யானை தந்தங்களை விற்க முயன்ற திமுக பிரமுகர் உட்பட 4 பேர் கைது: கர்நாடக போலீஸார் தீவிர விசாரணை

தேன்கனிக்கோட்டை அருகே யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றதாக திமுக ஒன்றிய செயலாளர் உட்பட 4 பேரை கர்நாடக மாநில போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட அஞ்செட்டி, உரிகம், தளி, ஜவளகிரி வனப்பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இவை தவிர, ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள், தமிழக வனப்பகுதிக்குள் வந்து செல்கின்றன. இந்நிலையில், அடர்ந்த வனப்பகுதிகளில் யானைகளைக் கொன்று தந்தங்களை சிலர் கடத்துவதாக புகார் எழுந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றதாக, தருமபுரி மாவட்டம் ஆலமரத்துபட்டி கிராமத்தைச் சேர்ந்த நவீன் பிரசாத், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் ஆகியோரை கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாலட்சுமி நகர் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 தந்தங்களை போலீஸார் பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில், யானை தந்தம் கடத்தலில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

திமுக ஒன்றிய செயலாளர்

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு கர்நாடக மாநிலம் பெங்களூரு மாநகர துணை ஆணையர் ராம்தேவ் சேபாட், இன்ஸ்பெக்டர் லோகிட் ஆகியோர் தேன்கனிக்கோட்டை வட்டம் அஞ்செட்டிக்கு வந்தனர். தமிழக போலீஸார் உதவியுடன், அஞ்செட்டியைச் சேர்ந்த திமுக ஒன்றிய செயலாளர் காதர்பாஷா, அவரது கார் ஓட்டுநர் முத்துசாமி ஆகியோரை கைது செய்தனர். தந்தம் கடத்தி விற்பனை செய்து வந்த சம்பவத்தில், பெட்டமுகிலாளம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் உள்ளிட்ட மேலும் சிலரை கர்நாடக போலீஸார் தேடி வருவதாக தமிழக போலீஸார் கூறினர்.

கர்நாடக போலீஸார், திமுக பிரமுகர் காதர்பாஷாவை கைது செய்து பெங்களூருக்கு அழைத்து சென்றனர். இதனிடையே திமுக பிரமுகர் கடத்தப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து தேன்கனிக்கோட்டை அருகே போலீஸாரின் வாகனத்தை கட்சியினர் முற்றுகையிட்டனர். திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x