Published : 29 Jun 2018 08:08 AM
Last Updated : 29 Jun 2018 08:08 AM

கோவையில் ஒரு டன் ‘குட்கா’ பறிமுதல்: உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை

கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு டன் குட்கா பாக்கு வகைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே குட்கா ஆலை கண்டறியப்பட்டதையடுத்து, குட்கா பொருட்கள் மீதான ஆய்வு அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நகர்ப்புறத்தில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் குழு நேற்று திடீர் ஆய்வில் ஈடுபட்டது.

டவுன்ஹால் பகுதியில் மேற்கொண்ட ஆய்வில், தாமஸ் வீதியில் உள்ள ஒரு மொத்த விற்பனைக் கடையில் 750 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பாக்கு வகைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதேபோல், தர்மராஜா கோயில் வீதி, பட்டயகாரர் சாலையிலுள்ள மற்றொரு கடையில் 280 கிலோவும், ராஜவீதியில் உள்ள மொத்த விற்பனைக் கடையில் சுமார் 100 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆய்வு தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே, ஒரே நாளில் ஒரு டன்னுக்கும் அதிகமான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக உணவுப் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக விஜயலலிதாம்பிகை கூறியதாவது:

ஒரே நாளில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு நடத்தி, சுமார் 1 டன் அளவில் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படும். தடை செய்யப்பட்ட பொருட்கள் என உறுதி செய்யப்பட்டால், ரூ.1 லட்சம் வரை அபராதம், 6 மாதம் வரை சிறை தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x