Published : 29 Jun 2018 08:06 AM
Last Updated : 29 Jun 2018 08:06 AM

2.41 லட்சம் ஆசிரியர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூடும் எண்ணம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்து, 2 லட்சத்து 41 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் வேலைக் காக காத்திருக்கின்றனர். இருப்பினும், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய திமுக உறுப்பினர் பொன்முடி,‘‘தமிழகத்தில் 20 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூடும் அரசின் நடவடிக்கையை கைவிட வேண்டும். தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பயிற்சி முடித்தவர்களா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதா வது:

தமிழகத்தில் 20 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இருப்பினும் அவற்றை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று, பணிக்காக காத்திருக்கும் பட்டயம் முடித்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 41 ஆயிரத்து 555 ஆகும். தற்போது தமிழகத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் 29 ஆயிரத்து 297 பள்ளிகளில் 85 ஆயிரத்து 109 இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உபரியாக உள்ளனர்.

மேலும், இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் குறைந்துள்ளதால் பட்டயப்படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இருப்பினும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை.

மேலும், தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் தான் பணியாற்றுகிறார்களா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். இதை முறைப்படுத்துவதற்கு உரிய சட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தமிழகத்தில் 5-ம் வகுப்புவரை உள்ள பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்களுடன் 848 பள்ளிகள் உள்ளன.

குறைந்த பட்சம் 40 மாணவர்கள் இருந்தால்தான் 2 ஆசிரியர் கொண்ட பள்ளி செயல்படும். குறைந்த மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில் இருந்து மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்து அப்பள்ளிகளை 4 ஆசிரியர் கொண்ட பள்ளிகளாக தரம் உயர்த்தி வருகிறோம்.

அவ்வாறு இருந்தால்தான் அந்த மாணவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும். மேலும், மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த செப்டம்பர் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x