Published : 25 Jun 2018 06:58 PM
Last Updated : 25 Jun 2018 06:58 PM

செல்போன்கூட இல்லாமல் வெறுங்கையுடன் எதற்கு வெளியில் வருகிறாய்: ஆத்திரத்தில் இளைஞரை கத்தியால் வெட்டிய வழிப்பறி நபர்கள்

தி.நகரில் வழிப்பறி கும்பல் ஒன்று இளைஞர் ஒருவரை வழிப்பறி செய்யும்போது அவரிடம் எதுவும் இல்லாததால் வெறுங்கையுடன் எதற்கடா வெளியில் வருகிறாய் என ஆத்திரத்தில் கையை வெட்டிவிட்டு சென்றனர்.

சென்னை தி.நகர் உஸ்மான் சாலையை சேர்ந்தவர் பாலேஸ்வர் சிங். வட மாநிலத்தவரான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். நேற்று இரவு இவர் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். வீட்டிலிருந்து கிளம்பி சில நூறு மீட்டர் தூரம் சென்றிருப்பார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்றுபேர் அவரை வழிமறித்து மோட்டார் சைக்கிளை நிறுத்தி இறங்கியுள்ளனர்.

அவர்களை பார்த்து பாலேஸ்வர் சிங் பயத்துடன் என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார். மூவரில் ஒருவன் கத்தியை எடுத்து காட்டி பணம் நகை செல்போன் அனைத்தையும் எடு என்று கூறியுள்ளார். என்னிடம் எதுவும் இல்லை என கையை விரித்துள்ளார் பாலேஸ்வர் சிங்.

என்னடா நடிக்கிறாயா? என்று பாலேஸ்வரை சோதனையிட்டுள்ளனர். ஆனால் பாலேஸ்வரிடல் சல்லிபைசா கூட தேறாததால் ஆத்திரமடைந்த மூன்று வழிப்பறி நபர்களும் இன்னைக்கு சாதாரண கூலி வேலை செய்பவன் கூட ஆன்ட்ராய்டு போன் வச்சிருக்கான், நீ ஒன்றுமே இல்லாமல் வெறுங்கையை வீசிக்கிட்டு வர்ற. உனக்காக நாங்க மூன்று பேர் பைக் பெட்ரோல் போட்டு போலீஸ் சோதனையை மீறி வந்தால் எதுவுமில்லை என்கிறாய் என்று திட்டியுள்ளனர்.

பின்னர் எதுவும் இல்லாமல் வெறுங்கையை வீசிக்கிட்டு எதுக்குடா வெளியே வருகிறீர்கள் என்று கையை நீட்டச்சொல்லி கையில் கத்தியால் பலமாக வெட்டிவிட்டு மூவரும் பைக்கில் ஏறி சென்றுவிட்டனர். கையில் வெட்டுப்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் பாலேஸ்வர் சிங் அனுமதிக்கப்பட்டார்.

இந்த வழிப்பறி தாக்குதல் குறித்து மாம்பலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் வழிப்பறி அதிகரித்ததை ஒட்டி ஜூன் 30 வரை இணை ஆணையர்கள் கண்காணிப்பில் துணை ஆணையர்கள் தலைமையில் சென்னை முழுதும் வாகன சோதனை என்று காவல் ஆணையர் அறிவித்தார்.

ஆனால் தி.நகரின் முக்கியமான பிரதான சாலை. நகைக்கடைகள், வியாபார ஸ்தலங்கள் உள்ள சாலையில் மூன்று பேர் கத்தியுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் உலா வந்து கத்தியால் வெட்டிவிட்டு சென்றுள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

போலீஸ் சோதனையை மீறி இவர்கள் எப்படி பிரதான சாலையில் கத்தியுடன் திரிய முடிகிறது என்பது கேள்விக்குரிய ஒன்றுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x