Published : 25 Jun 2018 02:42 PM
Last Updated : 25 Jun 2018 02:42 PM

தவறான உறவை கண்டித்த தம்பிக்கு அக்கா வைத்த விஷம்: உடன் மது அருந்திய நண்பர்களும் பலி: 4 பேர் கொலையில் ஆண் நண்பருடன் பெண் கைது

தனது தவறான உறவை கண்டித்த தம்பியை கொல்லும் நோக்கில் உணவில் அக்கா வைத்த விஷம் அவரது நண்பர்களையும் சேர்த்து கொன்றது. நான்கு பேரை கொன்றதாக அக்காவும் அவரது ஆண் நண்பரும் கைது செய்யப்பட்டனர்.

சிவகாசி விஸ்வநத்தம்புதூரைச் சேர்ந்தவர் முருகன்(30), இவரது சகோதரி வள்ளி(34). இவர் திருமணமாகி சில ஆண்டுகளில் கணவனை இழந்து விட்டார். இதனால் ஆதரவின்றி இருந்த வள்ளி தம்பியுடன் வந்து தங்கிவிட்டார். முருகனுக்கும் திருமணமாகவில்லை. ஆகவே தம்பிக்கு உதவியாக சமைத்துப்போட்டு வீட்டில் தங்கிவிட்ட வள்ளி அருகில் இருந்த பிரிண்டிங் பிரஸ் ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர் செல்வம்(40). இவர் உரிமையாளர் என்ற முறையில் வள்ளியிடம் பழக நாளடைவில் நெருக்கமாகி பின்னர் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. அரசல் புரசலாக இவர்கள் உறவு ஊருக்குள் தெரியவர வள்ளியின் தம்பி முருகனிடம் சிலர் அழைத்து வள்ளியை கண்டித்து வைக்கும்படி கூறியுள்ளனர்.

இதனால் முருகன் வள்ளியிடம் சண்டைப்போட்டு வேலைக்கு சென்றால் ஒழுங்காக வீட்டுக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளார்.ஆனால் வள்ளி தனது தொடர்பை விடாததால் முருகன் வள்ளியிடம் சண்டை போட்டுள்ளார். நாளடைவில் இது குறித்து அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வள்ளி செல்வத்திடம் தனது தம்பி சண்டைப்போட்டு பிரச்சினை செய்வதாக கூறியுள்ளார். குடித்துவிட்டு தன்னிடம் தகராறு செய்வதாகவும் சில நேரம் அத்துமீறி நடக்க முயல்வதாகவும் கூறியுள்ளார். தம்பி இருக்கும் வரை நாம் பழக முடியாது என்று கூறியுள்ளார்.

இதையடுத்து முருகனை கொலை செய்ய வள்ளியும் செல்வமும் திட்டம் தீட்டியுள்ளனர். யாரும் சந்தேகப்படாதபடி முருகனை கொன்றுவிட வேண்டும் என திட்டம் போட்டுள்ளனர். முருகனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதற்காக மது அருந்தும்போது சைட் டிஷ்ஷாக சிக்கன், மட்டனை பொறித்து தருவார் வள்ளி. இதை அடுத்து தம்பியை கொல்ல அவருக்கு மது அருந்தும்போது கொடுக்கும் கோழிவருவலில் விஷத்தை கலந்து வைத்துவிட்டால் முருகன் இறந்துவிடுவார் யாருக்கும் சந்தேகம் வராது, மதுவால் இறந்தார் என்று நினைத்துக்கொள்வார்கள் என்று முடிவு செய்தனர்.

இதையடுத்து செல்வம் விஷத்தை வள்ளியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. நேற்று முன் தினம் முருகன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவார் என்பதை வள்ளி கணித்து அவருக்காக கோழி வாங்கி அதை பொறித்து அதில் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த விஷத்தை கலந்துள்ளார். பின்னர் யாரும் சந்தேகப்படாதபடி வீட்டை பூட்டிவிட்டு கிளம்பி விட்டார்.

ஆனால் அன்று யாரும் எதிர்ப்பார்க்காதவண்ணம், முருகன் தனது நண்பர்கள் எட்டுபேருடன் விஸ்வநத்தம்புதூர் கண்மாயில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். சிறுவன் ஒருவனை வீட்டுக்கு அனுப்பி கோழிக்கறி பொறித்து வைத்திருப்பதை எடுத்துவரச்சொல்லி அதை மது அருந்திக்கொண்டே அனைவரும் சாப்பிட்டுள்ளனர். சிறுவனும் சாப்பிட்டுள்ளார்.

சாப்பிட்ட சிறிது நேரத்தில் விஷம் வேலை செய்யவே சம்பவ இடத்திலேயே, முருகன் அவரது நண்பர்கள் கணேசன், முகமது இப்ராகிம், மற்றும் ஒரு 15 வயதுச் சிறுவன் உயிரிழந்தனர். மற்ற 6 நண்பர்கள் மயங்கி விழுந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு சிவகாசி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

4 பேர் மது அருந்தி உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தினர். மதுவால் உயிரிழந்திருந்தால் மது அருந்ததாக சிறுவன் எப்படி உயிரிழந்தார் என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து கோழிக்கறி எங்கிருந்து மது அருந்தியவர்களுக்கு கிடைத்தது என்று போலீசார் விசாரணை நடத்தினர். உயிரிழந்த முருகனின் வீட்டில் இருந்துதான் கோழிக்கறி கொண்டுவரப்பட்டது சிகிச்சையில் இருப்பபவர்கள் கூறியதில் தெரியவந்தது. இதையடுத்து முருகன் வீட்டுக்கு சென்ற போலீஸார் வள்ளியை தேடினர்.

ஆனால் தான் முருகனுக்காக வைத்த விஷம் 4 பேர் உயிரைப்பறித்ததை அறிந்துக்கொண்ட வள்ளி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தம்பியை கொல்ல மட்டுமே விஷம் வைத்ததை ஒப்புக்கொண்ட அவர் தவறுதலாக அந்த உணவை மற்றவர்கள் சாப்பிட்டதால் மற்றவர்களும் உயிரிழந்துவிட்டனர் என்று தெரிவித்த வள்ளி வேறொரு புதிய தகவலை தெரிவித்தார்.

கணவரை பிரிந்து தம்பி முருகன் வீட்டில் வள்ளி வசித்து வந்த தம்மிடம் மதுபோதையில் பலமுறை தம்பி முருகன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார், அவரை விட்டு விலகவும் முடியவில்லை அதனால் தனக்கு முருகனிடமிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக முருகனை கொல்ல விஷம் வைத்தேன் ஆனால் அது இப்படி ஆகும் என்று நினைக்கவில்லை, செல்வத்துக்கும் தனக்கும் எந்தவித தவறான உறவும் இல்லை என காவல் எஸ்பியிடம் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் போலீஸார் பிரிண்டிங் பிரஸ் உரிமையாளர் செல்வத்தையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்களுக்கு வேண்டாதவர்கள் என்றால் அவர்களை கொல்லவும் துணியும் சுயநலப்போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தனது தவறான உறவுக்கு இடைஞ்சலாக இருந்த அக்கா மற்றும் அவரது கணவரை விஷம் வைத்து கொன்றதாக தங்கையும் அவரது ஆண் நண்பரும் நேற்று முன் தினம் சென்னையில் கைதானார்கள். இரண்டு நாளில் மற்றொரு சம்பவம் சிவகாசியில் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x