Published : 25 Jun 2018 03:01 PM
Last Updated : 25 Jun 2018 03:01 PM

சமூகநீதி போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தமிழிசை; ராமதாஸிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜி.கே.மணி எச்சரிக்கை

108 சமுதாயங்களுக்கு சமூக நீதி கிடைப்பதற்கு காரணமாக இருந்த ராமதாஸின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தமிழிசை சவுந்தரராஜன் அதற்காக ராமதாஸிடமும், வன்னியர் சமுதாயத்திடமும் நிபந்தனையின்றி, மன்னிப்புக் கேட்க வேண்டும் என, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.மணி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “அரசியலுக்கும், சமூக சேவைக்கும் தேவையான அடக்கமும், பக்குவமும் இல்லாமல் கருத்து என்ற பெயரில் கத்துவதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் வித்தியாசமாக கத்தியிருக்கிறார். அது பெரும்பான்மை சமுதாயத்தின் செவிகளை கிழித்து மனங்களை காயப்படுத்தியுள்ளது.

சென்னையிலிருந்து ஒளிபரப்பாகும் தனியார் (நியூஸ் 7) தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கிய தமிழிசை சவுந்தரராஜனிடம் சென்னை- சேலம் பசுமை சாலைக்கு மக்களிடையே எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வழக்கம் போலவே மக்களை சமூக விரோதிகளாக அவர் சித்தரித்துக் கொண்டிருந்தார். அடுத்து, ஏற்கெனவே சேலத்திற்கு செல்ல இரு சாலைகள் உள்ள நிலையில், இத்திட்டம் தேவையா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டிருக்கிறாரே? என செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது அதற்கான பதில் தமிழிசையிடம் இல்லை. அதனால் அகங்காரத்துடன் குரூர சிரிப்பை வெளிப்படுத்தி விட்டு, 30 ஆண்டுகளுக்கு முன்பாக கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் கடைநிலையில் இருந்த பாமக இட ஒதுக்கீடு கேட்டு ராமதாஸ் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் சில கருத்துகளை உதிர்த்து திருப்தியடைந்திருக்கிறார். தமிழிசை சவுந்தரராஜனின் இந்தக் கருத்து கண்டிக்கத்தக்கது; இது அவரை அடையாளப்படுத்தியுள்ளது.

சில நேரங்களில் காற்று செய்யும் தவறுகளால் மேலே அடித்துச் செல்லப்படும் பொருட்களில் சில தங்களுக்கு இறகு முளைத்து விட்டதாகவும், தாங்கள் பறந்து கொண்டிருப்பதாகவும் கற்பனை செய்து கொள்வது வழக்கம். அந்த நேரத்தில் அவர்களுக்கு தாங்கள் யார்? என்பதும், மற்றவர்களின் மதிப்பு என்ன? என்பதும் மறந்து போயிருக்கும். காற்றின் வேகத்தில் தாங்கள் ஏற்கெனவே இருந்த இடத்தை விட மோசமான இடத்தில் வீசியடிக்கப்படும் போது தான் அவற்றுக்கு தங்களைப் பற்றிய நினைவுகள் வரும். அதேபோன்று பறப்பதாக நினைத்துக் கொண்டிருந்த வேளையில் தான் தமிழிசை சவுந்தரராஜன் வெறுப்பு வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார். அய்யோ பாவம் தமிழிசை. அவருக்கு வரலாறு தெரியாது. விட்டுத்தள்ளுங்கள் என்று ராமதாஸ் கூறிவிட்ட போதிலும் கூட, அதை ஏற்றுக் கொள்ள பாமக தயாராக இல்லை. சமூக நீதிக்காக தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயம் நடத்திய போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தமிழிசை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கொந்தளித்துக் கொண்டுள்ளனர்.

தமிழிசை சவுந்தரராஜனுக்கு அறிவும், அனுபவமும் அவ்வளவாக போதாது. அதனால் தான் 1987 ஆம் ஆண்டில் நடைபெற்ற சமூகநீதிப் போராட்டத்தின் மகத்துவம் அவருக்கு புரியவில்லை. அது ஒரு தியாக வரலாறு. அந்த வரலாற்றின் கதாநாயகர் ராமதாஸ். சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என்பதைப் போல, சமூக நீதியும் சும்மா கிடைத்துவிடவில்லை. 21 உயிர்களை துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலி கொடுத்து, ராமதாஸ் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் சிறை தண்டனைகளை அனுபவித்து அதன்பயனாகத் தான் வன்னியர் உள்ளிட்ட 108 சமூகங்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த உண்மைகளை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் உரிமைக்காக போராடுவோரை எல்லாம், யாரோ சொல்லிக்கொடுத்தவாறு, சமூக விரோதிகள் என்று கிளிப்பிள்ளை போன்று கூறும் தமிழிசை சமூக நீதிப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தியிருப்பதை பெரும்பான்மை சமுதாய மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

(ராமதாஸ் சொந்த சாதிக்காக மட்டும் போராடும் வழக்கம் கொண்டவர் அல்ல. எந்த சமூகம் பாதிக்கப்பட்டாலும் அதற்கான முதல் குரல் ராமதாஸிடம் இருந்துதான் வெளிப்படும். கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன், தமிழிசை சவுந்தரராஜன் சார்ந்த நாடார் சமூகத்தினரைப் பற்றி மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் எட்டாம் வகுப்பு புத்தகத்தில் இழிவாக பதிவு செய்யப்பட்டிருந்ததை அறிந்த ராமதாஸ் தான், முதன்முதலில் மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமின்றி தமது செலவில் சட்டப்போராட்டம் நடத்தி நாடார் சமுதாயம் குறித்து பாடப்புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த இழிவான கருத்துக்களை நீக்க வைத்தார். அதற்காக நாடார் அமைப்புகள் ராமதாஸுக்கு பாராட்டு விழா நடத்திய போது, அதை தடுக்க முயன்று தோற்றுப் போனவர் தான் தமிழிசை. அவரது சிந்தனை எவ்வளவு கோனலானது என்பதற்கு இதுவே சாட்சி.)

108 சமுதாயங்களுக்கு சமூக நீதி கிடைப்பதற்கு காரணமாக இருந்த ராமதாஸின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தமிழிசை சவுந்தரராஜன் அதற்காக ராமதாஸிடமும், வன்னியர் சமுதாயத்திடமும் நிபந்தனையின்றி, மன்னிப்புக் கேட்க வேண்டும். அவ்வாறு செய்யும்வரை தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக பாமக சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்” என ஜி.கே.மணி எச்சரித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x