Published : 25 Jun 2018 07:53 AM
Last Updated : 25 Jun 2018 07:53 AM
டிடிவி தினகரன் மூலம் 18 எம்எல்ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் ரூ.180 கோடி கொடுத்ததாக அமைச்சர் மணிகண்டன் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக சார்பில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விழா பொதுக்கூட்டம், திருப்புல்லாணி ஒன்றியம் ரெகுநாதபுரத்தில் நடந்தது. இதில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம். மணிகண்டன் கலந்துகொண்டு பேசியதாவது:
1974-ம் ஆண்டில் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் மிரட்டலுக்கு அஞ்சி, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக செய்யப்பட்ட ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறி விட்டார். அப்போது முதல் கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுத்து வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி 177 டிஎம்சி தண்ணீரை பெற்றுள்ளோம். மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீருக்காக அரசியல் வரலாற்றில் இதுவரை எந்த கட்சியும் செய்யாத வகையில் நாடாளுமன்றத்தை 22 நாட்கள் முடக்கினோம். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் என அனைவரும் காவிரி நீருக்காக உண்ணாவிரதம் இருந்தோம்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்துவதற்காக மு.க. ஸ்டாலின் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். 18 எம்எல்ஏ.க்களை தினகரன் மூலமாக கடத்திச் சென்று, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 கோடி வீதம் 180 கோடி ரூபாயை தினகரன் வழியாக ஸ்டாலின் கொடுத்துள்ளார். தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும், எட்டுவழி பசுமைச் சாலை திட்டத்துக்கு தடை போடும் வகையிலும் விவசாயிகளை திமுக தூண்டி விடுகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT