Published : 25 Jun 2018 07:50 AM
Last Updated : 25 Jun 2018 07:50 AM

சிவகாசியில் மது குடித்த சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழப்பு: ஆபத்தான நிலையில் உள்ள 4 பேருக்கு தீவிர சிகிச்சை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மது குடித்த சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவகாசி சிறுகுளம் கண்மாய் பகுதியில் ஒரு சிறுவன் உட்பட 8 பேர் நேற்று பிற்பகல் வாந்தி எடுத்து மயங்கிக் கிடந்தனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் 8 பேரையும் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

சிவகாசி நகர் போலீஸார் விசாரணை நடத்தியபோது, உயிரிழந்தது சிவகாசி லிங்கபுரம் காலனியைச் சேர்ந்த 15 வயது சிறுவன், காமராஜர் காலனியைச் சேர்ந்த கணேசன்(20), வேலாயுத ரஸ்தா சாலை முகமதுஇப்ராகிம் (22), முருகன்(23) என தெரியவந்தது.

மயங்கிய நிலையில் இருந்த சிவகாசி வம்பிழுத்தான் முக்கு பகுதியைச் சேர்ந்தவர்களான ஐயப்பன்(22), ஹரிஹரன் என்கிற அந்தோணி(24), சரவணகுமார்(22), ஜனார்த்தனன்(15) ஆகியோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ஐயப்பன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவர்கள் அனைவரும் கூலி தொழிலாளர்கள். குற்றாலம் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு, சிவகாசி பராசக்தி காலனியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி சிறுகுளம் கண்மாய் பகுதியில் குடித்துள்ளனர்.

இதுகுறித்து, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்திய எஸ்பி ராஜராஜன் கூறியது: இவர்கள் மீது குருணை மருந்து வாடை வருகிறது. எனவே இவர்கள் மதுவில் விஷம் கலந்து குடித்தார்களா?, அவ்வாறு குடித்திருந்தால் அதற்கு காரணம் என்ன?, விஷம் கலந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மயக்கத்தில் உள்ளவர்கள் பேசினால்தான் உண்மை காரணம் தெரியவரும் என்றார். இதேபோல தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன் நேரில் விசாரணை நடத்தினார். இதனிடேயே இறந்தவர்களின் உறவினர்கள் ‘உரிய விசாரணை நடத்த வேண்டும், அதுவரை உடல்களை பெற மாட்டோம்’ எனக் கூறி சிவகாசி அரசு மருத்துவமனை அருகே உள்ள இரட்டை பாலத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இவர்கள் அனைவரும் பராசக்தி காலனியில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் மது அருந்தியதாகவும், அங்கேயே மயங்கி விழுந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x