Published : 25 Jun 2018 07:32 AM
Last Updated : 25 Jun 2018 07:32 AM
சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுகவினர் 1,111 பேர் மீது கிண்டி போலீஸார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன்தொடர்ச்சியாக கடந்த 22-ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கலில் திமுக சார்பில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. அப்போது, அந்த வழியாக காரில் சென்ற ஆளுநர் கார் மீது கருப்பு கொடி வீசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
திமுகவினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முக்கிய நிர்வாகிகளும் எல்எல்ஏக்களுமான மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன் உள்ளிட்டோருடன் கருப்புக் கொடி ஏந்தி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட நேற்று முன்தினம் பேரணியாகச் சென்றனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை முன் அமர்ந்து அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். தமிழக அரசுக்கு எதிராகவும் ஆளுநருக்கு எதிராகவும் ஸ்டாலின் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் 1,111 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், அதிகாரிகளின் உத்தரவை மீறுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் கிண்டி போலீஸார் வழக்குப் பதிந் துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT