Published : 23 Jun 2018 11:10 AM
Last Updated : 23 Jun 2018 11:10 AM
இனியும் காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றிற்கு தலைவர், உறுப்பினர்களின் பெயரை அறிவித்திருக்கிறது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது தமிழக விவசாயிகள் எதிர்பார்த்த செய்தி.
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக அரசு உறுப்பினர்களை பரிந்துரைக்காத சூழலில் கர்நாடகம் தவிர்த்து மத்திய அரசு மற்றும் 3 மாநிலங்களான தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகியவற்றிற்கு உறுப்பினர்களின் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே மத்திய அரசு இனிமேல் காலதாமதம் செய்யாமல் ஆணையத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுத்து தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்க வழி வகுக்க வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும். ஆணையமும் நீர் பங்கீடு, அணைகளை திறப்பது போன்றவற்றில் அதன் அதிகாரத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.
குறிப்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும் முறையாக, சரியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு நதிநீர் பங்கீட்டில் மாநில உரிமைகளை காக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் இனி வரும் காலங்களில் தமிழகத்துக்கான காவிரி நதிநீர் உரிய காலத்தில் முறையாக, சரியாக கிடைக்க வேண்டும். காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்துக்கான தண்ணீர் கிடைக்கப்பெற்று விவசாயம் மேலோங்கி, குடிநீர் தட்டுப்பாடும் நீங்கி தமிழகம் வளம் பெற வேண்டும், நாடும் வலிமை பெற வேண்டும்” என.ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT