Published : 23 Jun 2018 10:13 AM
Last Updated : 23 Jun 2018 10:13 AM

சென்னையைச் சேர்ந்த 2 லட்சம் பேர் பயனடையும் வகையில் விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த கால அவகாசம் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு: கட்டணத்தையும் வெகுவாகக் குறைத்தது வீட்டு வசதித் துறை

விதி மீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதுடன், காலக்கெடுவும் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு முன் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களில் விதிமீறல்கள் இருந்தால், விதிகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு கடந்தாண்டு ஜூன் மாதம் அறிவித்தது. முதலில் இதற்கு 6 மாதம் காலக்கெடு வழங்கப்பட்டது.

விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், மேலும் ஆறு மாதம் நீட்டிக்கப்பட்டது. இந்த வகையில், ஓராண்டு காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், மேலும் 6 மாதங்களுக்கு காலக்கெடுவை நீட்டித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலர் கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதவிர, வரன்முறைப்படுத்துவதற்கான கட்டணமும் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிக்கையும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, குடியிருப்பு வகையில், சாதாரணக் கட்டிடமாக இருந்தால் கூடுதலாக கட்டப்பட்ட தளப்பரப்புக்கான வழிகாட்டி மதிப்பில் 0.01 சதவீதமும், சிறப்புக் கட்டிடமாக இருந்தால் 0.10 சதவீதமும், அடுக்குமாடிக் கட்டிடமாக இருந்தால் 0.25 சதவீதமும் கட்டணமாக செலுத்த வேண்டும்.

வர்த்தக கட்டிடத்தைப் பொறுத்தவரை, சாதாரணக் கட்டிடத்துக்கு 0.05 சதவீதம், சிறப்புக் கட்டிடத்துக்கு 1 சதவீதம், அடுக்குமாடிக் கட்டிடத்துக்கு 1.25 சதவீதம் அளவுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். கல்வி நிறுவனம் மற்றும் தொழிற்சாலையாக இருந்தால் சாதாரணக் கட்டிடத்துக்கு 0.03 சதவீதம், சிறப்புக் கட்டிடத்துக்கு 0.25 சதவீதம், அடுக்குமாடிக் கட்டிடத்துக்கு 0.50 சதவீதமும் கட்டணம் செலுத்த வேண்டும்.

கட்டணத்தில் மாற்றம்

அதே போல், சாலை அகலம் மற்றும் அதை பொறுத்த கட்டிடத்தின் சுற்றிலும் விடப்படும் இடம் தொடர்பான விதிமீறல்களுக்கு ஒரே வரன்முறை கட்டணம் விதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, நீதிபதி ராஜேஷ்வரன் குழு பரிந்துரைத்ததன்படி கூடுதல் தளப்பரப்பு கட்டப்பட்டிருந்தால் விதிக்கப்படும் கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்கான கட்டணத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தளப்பரப்பு குறியீடு 1.5 மடங்காக இருந்தால் 100 சதவீதம், 1.5 லிருந்து 3 மடங்குக்கு 200 சதவீதம், 3 மடங்குக்கு மேல் இருந்தால் 300 சதவீதம் அளவுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

இதுதொடர்பாக அகில இந் திய கட்டுநர் சங்கத் துணைத்தலைவர் எஸ். ராமபிரபு கூறிய தாவது:

கட்டிட வரன்முறைத் திட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, சாதாரண குடியிருப்புக் கட்டிடத்தில் கூடுதலாக விதிமீறி கட்டப்பட்ட பகுதிக்கு வழிகாட்டி மதிப்பில் 3-ல் 2 பங்கு தொகை செலுத்த வேண்டும். ஆனால், தற்போது இது 0.01 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையைச் சேர்ந்த 2 லட்சம் பேர் வரை பயனடைவார்கள்.

அனுமதி பெற்று விதிமீறி கட்டியவர்கள், அனுமதி பெறாமல் கட்டியவர்கள் இதன் மூலம் கட்டிடத்தை வரன்முறைப்படுத்திக் கொள்ள முடியும். ஏற்கெனவே 400 பேர் இத்திட்டத்தின்படி பணத்தைச் செலுத்தி வரன்முறைக்கு காத்திருக்கின்றனர். 3,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால், அதிக அளவில் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. அரசுக்கும் வருவாய் பெருகும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x