Published : 23 Jun 2018 07:38 AM
Last Updated : 23 Jun 2018 07:38 AM

குட்கா ஊழல் வழக்கு விவகாரம்: உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை- தொடர்புடையவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பவும் திட்டம்

குட்கா வழக்கு விவகாரத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக முறைகேடு நடைபெற்ற காலத்தில் சென்னையில் பணியாற்றிய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் பெயர் பட்டியலை சிபிஐ அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்தது. தடையை மீறி இந்த வகை புகையிலை பொருட்கள் தமிழகத்தில் சட்ட விரோதமாக தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த 2016-ல் சென்னை செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோன் ஒன்றில் டெல்லி வரு மான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட டைரி ஒன்றில் அமைச்சர், போலீஸ் அதிகாரிகளுக்கு மாதமாதம் லஞ்சமாக பணம் கொடுத்திருந்த விவரம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த டைரி உடனடியாக டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

தொடர்ந்து லஞ்சம் வாங்கி குட்கா ஆலை செயல்பட துணையாக இருந்த அதிகாரிகள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டன.

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தொடர்ந்த வழக்கின்பேரில், குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையில்..

இதன்தொடர்ச்சியாக, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். குட்கா வழக்கில் கடந்த 2016-ல் கைது செய்யப்பட்ட மாதவ் ராவுக்கு உதவி செய்த அதிகாரிகள் யார் என்றும், அவருக்கு செங்குன்றத்தில் குடோன் அமைக்க அனுமதி அளித்த மற்றும் அந்த குடோனை பரிசோதனை செய்த அதிகாரிகள் யார் என்றும் அந்த கால கட்டத்தில் பதவியில் இருந்தவர்கள் யார், யார் என்றும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விரைவில் சம்மன்

அவருடன் தொடர்பில் இருந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பட்டியலையும் சிபிஐ அதிகாரிகள் சேகரித்தனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பி அவர்களை நேரில் அழைக்கவும் சிபிஐ திட்டமிட்டுள்ளது.

குட்கா முறைகேட்டில் விவகாரத்தில் கலால், வருவாய்த் துறை மற்றும் சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த அதிகாரிகளின் பட்டியலை சிபிஐ அதிகாரிகள் ரகசியமாக சேகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x