Published : 22 Jun 2018 10:53 AM
Last Updated : 22 Jun 2018 10:53 AM

ரயில் நிலையங்களில் இன்று முதல் அபராதம்: செல்பி எடுத்தால் ரூ. 2 ஆயிரம்; குப்பையை வீசினால் ரூ. 500

ரயில் நிலையங்களில் செல்பி எடுத்தால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று அமலுக்கு வந்துள்ளது.

ரயில்களில் நின்று கொண்டும், ரயில் நிலையங்களில் ரயில் செல்லும் போதும் செல்பி எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். சிலர் பாலங்களில் ரயில் செல்லும் போதும், ரயில் பெட்டியின் படிக்கட்டில் நின்றவாறும் செல்பி எடுக்கின்றனர்.

இதனால், அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தண்டவாளத்தை கடக்கும்போது, ரயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையை விட தற்போது, தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்கும்போது, ரயிலில் அடிப்பட்டு உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இதையடுத்து ரயில் நிலையங்கள், ரயில் நிலைய வளாகம், ரயில்வே நடைமேடை, ரயில் படிக்கட்டுகள் ஆகியவற்றில் இருந்து செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மீறி செல்பி எடுப்பவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

ரயில் நிலைய வளாகத்தில் குப்பை தொட்டியை தவிர, பிற இடங்களில் குப்பை வீசி எறிபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இன்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. இதை கண்காணிக்க ரயில்வே நிர்வாகம் ஊழியர்களை நியமித்துள்ளது. மீறி செல்பி எடுத்தால், குப்பை கொட்டினால் அந்த இடத்திலேய அபராதம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x