Published : 22 Jun 2018 07:41 AM
Last Updated : 22 Jun 2018 07:41 AM

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க விரும்பவில்லை: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க திமுக விரும்பவில்லை என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரி வித்தார்.

திருச்சியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு மாநில ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:

2001-06 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையில் ஒருவர்கூட முஸ்லிம் கிடையாது. ஆனால், 2006-11 திமுக ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் 2 பேர் அமைச்சர்களாக இருந்தனர். தவிர, திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறுபான்மையின சமுதாயத்துக்கு உரிய மரியாதை, அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

நீட் தேர்வு குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை. மத்திய அரசைத் தட்டிக் கேட்கும் நிலையில் இங்குள்ள ஆட்சியும் இல்லை. குறிப்பாக, பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி, நாட்டைப் பற்றியோ மக்களைப் பற்றியோ சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லை.

திமுக நினைத்தால் தற்போதைய ஆட்சியை கலைத்திருக்க முடியும் என்றும், கருணாநிதி நல்ல நிலையில் இருந்தால் இப்படி விட்டிருப்பாரா என்றும் படித்தவர்களே பேசுகின்றனர். பல ஐஏஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள்கூட இதுகுறித்து என்னிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால், திமுக ஒருபோதும் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க விரும்பியதில்லை. ஆளுங்கட்சி எம்எல்ஏக்களும் கட்சி மாறினால் பதவி பறிபோய்விடும் என்று அமைதி காக்கின்றனர்.

அரசின் பல்வேறு திட்டங்களிலிருந்து ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுக்கு கமிஷன் தொகையாக மாதந்தோறும் பல கோடி ரூபாய் செல்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுகுறித்து விசாரணை நடத்தப்படும். அப்போது, பழனிசாமி உட்பட அமைச்சர்கள் அத்தனை பேரும் சிறைக்குள்தான் இருக்கப்போகிறார்கள்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x