Published : 22 Jun 2018 07:42 AM
Last Updated : 22 Jun 2018 07:42 AM
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பாண்டூர் கிராமத்தில் வயல் பகுதியில் பதிக்கப்பட்டிருந்த ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வயலில் பரவியதால் விளைநிலம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மயிலாடுதுறை அருகே பாண்டூர் மற்றும் பொன்னூர் கிராமங்களில் தலா 2 இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு குத்தாலத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக வயல் பகுதிகளில் சுமார் 3 அடி ஆழத்தில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
கச்சா எண்ணெய் நிறுத்தம்
இந்நிலையில், பாண்டூர்- பொன்னூர் சாலை பகுதியில் உள்ள ராஜதுரை என்பவரின் வயலில் குழாய் உடைந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது நேற்று தெரியவந்தது. தற்போது நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள இந்த வயலில் எண்ணெய் பரவியுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து அவர்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, குழாய் மூலம் கச்சா எண்ணெய் அனுப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகள் யாரும் வந்து பார்வையிடவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எண்ணெய்க் கசிவு காரணமாக விளைநிலத்தில் உள்ள நெற்பயிர்கள் கருகியுள்ளதாக விவசாயிகள் கூறினர். வயல் முழுவதும் எண்ணெய் பரவாமல் இருக்கும் வகையில் மடை அமைத்து விவசாயிகள் தடுத்துள்ளனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இப்பகுதியில் இதேபோன்று குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்று அடிக்கடி நிகழ்வதால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT